"தங்கம் விலை ஏறினாலும் சேமிப்புக்கு அதுதான் சிறந்த வழி" - வலியுறுத்தும் ஆனந்த் சீனிவாசன்

Subscribe to Oneindia Tamil
தங்கத்தில் முதலீடு செய்வது சரியான முடிவா
Getty Images
தங்கத்தில் முதலீடு செய்வது சரியான முடிவா

கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில், ஒரு கிராம் தங்கத்தின் விலை 5,200 ரூபாயைத் தொட்டுள்ளது. இருப்பினும் இந்த நேரத்திலும் தங்கத்தில் சேமிப்பு செய்வது சரியாக இருக்கும் என்கிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன்.

தங்கத்தின் விலை அடுத்த ஆண்டிற்குள் ஒரு கிராம் 6,000 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாகவும், விலை ஏறியுள்ள இந்த நேரத்திலும்கூட நடுத்தர குடும்பங்களுக்கு தங்கத்தில் சேமிப்பு செய்வது சரியான தேர்வாக இருக்கும் என்று சென்னையைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கூறுகிறார்.

சீனாவுக்கு அடுத்து உலகளவில் இந்தியாவில்தான் தங்கத்தின் நுகர்வு ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகிறது என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தங்கத்தின் விலை அதிகரிக்கக் காரணம் என்ன, தங்கம் வாங்கச் சரியான நேரம் எது உள்ளிட்ட கேள்விகளுக்குப் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் பதில் அளித்தார்.

தங்கத்தின் விலை ரூ.5,200ஐ தொட்டுள்ளது. இந்த விலை ஏற்றம் நீடிக்குமா? விலை அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன?

தங்கத்தின் விலையை இந்திய ரூபாய் மதிப்பில் நாம் பார்க்கும்போது விலை திடீரென அதிகரித்துள்ளது எனத் தோன்றும். ஆனால் டாலர் மதிப்பில் பார்க்கலாம்.

ஒரு அவுன்ஸ் என்பது 31 கிராம். டாலர் மதிப்பில் கடந்த ஆண்டு ஒரு அவுன்ஸ் தங்கம், 1,750 டாலராக இருந்தது. தற்போது அது 1,840 டாலராகத்தான் உள்ளது. ஆனால் இந்திய ரூபாய் மதிப்பில் கடந்த ஆண்டு ஜனவரியில் ரூ.4,753ஆக இருந்த ஒரு கிராம் இந்த ஆண்டு ஜனவரியில் ரூ.5,200ஐ அடைந்துள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது என்பதுதான் அதற்குக் காரணம். ஆனால் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, ரூபாயின் மதிப்பைப் பற்றிச் சொல்லாமல், டாலர் விலை அதிகரித்துள்ளது என்று மட்டும் பேசுகிறார். இது மரத்தில் இருந்து ஆப்பிள் விழவில்லை, மரம் பழத்தைத் தட்டிவிட்டது எனச் சொல்வதைப் போன்றது.

தங்கத்தில் முதலீடு செய்வது சரியான முடிவா
Getty Images
தங்கத்தில் முதலீடு செய்வது சரியான முடிவா

இந்தியாவின் ரூபாய் மதிப்பு குறைந்துள்ளதால், நமக்கு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது என்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு மிகவும் குறைந்துள்ளதால், தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

ஒரு நாட்டின் பண மதிப்பைக் காட்டும் கருவிதான் தங்கம். டாலர் விலையில் நீங்கள் பார்த்தால், அமெரிக்காவில் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் இல்லை. ஆனால் இந்தியாவில் அதிக விலையேற்றம்.

அதாவது இந்தியாவில் பணத்தின் மதிப்பு குறைவாக இருப்பதால், தங்கத்தின் மதிப்பு அதிகமாகத் தெரிகிறது.

அதனால், நம் நாட்டின் ரூபாய் மதிப்பு உயர்ந்தால்தான் தங்கத்தின் விலை குறையும். அதுவரை தங்கத்தின் விலை குறைய வாய்ப்பில்லை. அவ்வப்போது ஒரு சிறிய ஏற்றத்தாழ்வு மட்டும்தான் இருக்கும். இந்தியாவில் தங்கத்தின் விலையேற்றத்தைத் தவிர்க்கமுடியாது.

தங்கத்தில் முதலீடு செய்வது சரியான முடிவா
BBC
தங்கத்தில் முதலீடு செய்வது சரியான முடிவா

உலகளவில் பல நாடுகளில் பொருளாதார மந்த நிலை 2023இல் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன் தாக்கம் தங்கத்தின் விலையில் இருக்குமா?

பொருளாதார மந்தநிலை ஏற்பட்டால், தங்கத்தின் விலை உயரும். பொருளாதார மந்தம் ஏற்படும் காலத்தில், மக்கள் தங்களிடம் உள்ள தங்கத்தை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வார்கள்.

எடுத்துக்காட்டாக, பொருளாதார மந்தநிலை ஏற்பட்ட நாடுகளில் இருந்து வளர்ந்த நாடுகளுக்குச் செல்பவர்கள் தங்கத்தை தங்களுடன் எடுத்துச் செல்வார்கள்.

என்னைப் பொறுத்தவரை, தங்கத்தின் விலை இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளுக்கு ஏறுமுகத்தில்தான் இருக்கும். அதாவது, 2023இல் ஜூலை மாதம் தொடங்கி, தங்கத்தின் விலை அடுத்த ஜனவரியில் அதிகபட்சமாக ஒரு கிராம் ரூ.6,000 வரை செல்வதற்கு வாய்ப்புள்ளது.

தங்கத்தை சேமிப்பதற்கு எது சரியான நேரம்? இப்போது விலை அதிகரித்துள்ளது, இப்போதும் தங்கத்தை சேமிப்பதை நீங்கள் வலியுறுத்துவது ஏன்?

தங்கம் என்பது உடனடியாகக் கையில் இருக்கும் பணத்திற்குச் சமம். நடுத்தர குடும்பங்களின் அவசரத் தேவைக்கு தங்கத்தை வங்கியில் வைத்து பணம் பெற முடியும் என்பதால் அதைச் சேமித்து வைப்பது நல்லது. அதிலும் தங்கத்தை பாண்ட் முறையில் வாங்குவதை விட, தங்கத்தை நகை வடிவில் வைத்திருப்பதுதான் சரி.

தங்கத்தை வாங்குவதற்குச் சரியான நேரம் என்று ஒன்றைச் சொல்லமுடியாது. உங்களிடம் ரூ.1,000 இருந்தால்கூட, சேமிக்க நீங்கள் திட்டமிட்டால், மில்லிகிராம் அளவில் கூட பேப்பர் கோல்ட் வாங்கலாம். தேவைப்படும் நேரத்தில் அதில் கிடைக்கும் பணத்தில் தங்கத்தை வாங்கலாம்.

தங்கத்தில் முதலீடு செய்வது சரியான முடிவா
Getty Images
தங்கத்தில் முதலீடு செய்வது சரியான முடிவா

ரஷ்யா, யுக்ரேன் போர் போன்ற உலகளவில் சர்வதேச நாடுகளில் ஏற்படும் அரசியல் பிரச்னைகள் கூட தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்யும் என்று சொல்லப்படுகிறதே... அதைப் பற்றி உங்கள் கருத்து...

'flight to safety' என்று சொல்வார்கள். அதாவது ஆபத்துக் காலத்தில் மக்கள் தங்களிடம் உள்ள சொத்துகளில் பாதுகாப்பான சொத்து எதுவோ அதில் தங்களது பணத்தைச் சேமித்து வைத்துக் கொள்ளவர்கள்.

பங்குச்சந்தை போன்ற சொத்துகளில் இருந்து தங்களது பணத்தை தங்கம் போன்ற சொத்துகளில் மாற்றி வைத்துக் கொள்வார்கள். அதுதான் ரஷ்யா, யுக்ரேன் போர் தொடங்கிய காலத்தில் நடந்தது.

ஆனால் தொடர்ந்து நீடிக்கவில்லை. டாலர் விலை ஏறி, இறங்கியது. அதனால், அது முக்கியக் காரணமாக அமையும் என்று சொல்ல முடியாது.

நீங்கள் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், கடந்த ஆண்டின் கடைசி வர்த்தக நாளான (30 டிசம்பர் 2022) வெள்ளியன்று இந்திய ரூபாய் தான் ஆசியாவின் மிக மோசமாகச் செயல்படும் நாணயம் என்ற செய்தியை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும் மின்ட் நிறுவனமும் வெளியிட்டிருந்தது.

அதாவது, நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளைவிட மோசமான பாதிப்பை நாம் சந்தித்திருக்கிறோம் என்ற தகவல் வெளியானது. இது பற்றி இந்திய நாட்டின் நிதியமைச்சர் எதுவும் சொல்லவில்லை.

அதனால்தான் மீண்டும் நான் வலியுறுத்துகிறேன். நம் நாட்டில் பணவீக்கம் குறைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பதால், தங்கத்தைச் சேமிப்பதுதான் சிறந்தது. ஒரு கிராம் தங்கம் இந்தியாவில் ரூ.10,000ஆக ஏறுவதற்கான நாட்கள் வெகுதொலைவில் இல்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+