வசமாக மாட்டிய ட்ரூடோ! இப்போ தப்பிக்க பார்க்கிறார்! கனடா Ex அமைச்சர் பரபர! உள்நாட்டிலேயே எதிர்ப்பு?
ஒட்டாவா:இந்தியா மீது போதிய ஆதாரம் இல்லாமல் முன்கூட்டியே கனடா புகார்களை முன்வைத்துள்ளதாக அந்நாட்டின் முன்னாள் அமைச்சரும் ட்ரூடோவின் லிபரல் கட்சியைச் சேர்ந்தவருமான காஷ் ஹீட் தெரிவித்துள்ளார்.
கனடாவில் இருந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் பூரி கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் இந்தியா ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருக்கலாம் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூற அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தைத் திட்டவட்டமாக மறுக்கும் இந்தியா, ஆதாரத்தை அளிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்துகிறது. இருப்பினும், ஆதாரங்களை வெளியிடாமல் குற்றஞ்சாட்டுவதை மட்டும் கனடா வழக்கமான ஒன்றாக வைத்துள்ளது.
கனடா முன்னாள் அமைச்சர்: இதற்கிடையே ரிச்மண்ட் நகரச் சட்டப் பேரவை உறுப்பினர் அம்மாகாண முன்னாள் அமைச்சருமான காஷ் ஹீட் இது குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு சிறப்புப் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். ஹர்தீப் சிங் கொலை குறித்து இந்தியா ஆதாரம் கேட்கும் நிலையில், அது குறித்துப் பேசிய அவர், "கனடா முழுக்க பணத்திற்காகப் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் கும்பல் இருக்கிறது. அவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். இது இப்போது இருக்கும் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது.
என்னைப் பொறுத்தவரைத் தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் முன் கூட்டியே இந்த புகாரை முன்வைத்துள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க நாஜி வீரரை எழுந்து நின்று கவுரவித்த விவகாரத்திலும் கனடா சபாநாயகர் ராஜினாமா செய்ய வேண்டும் எனப் பலரும் வலியுறுத்துகின்றனர். இப்படி இரண்டு பக்கமும் வசமாகச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
மிகப் பெரிய சிக்கல்: இவற்றால் ட்ரூடோ இப்போது பெரிய சிக்கலில் இருக்கிறார். அவர் வெளியே வர ஒரு வழியை தேடுகிறார்.. இதுபோன்ற செயல்களால் அவர் மீதான நம்பகத்தன்மை இங்குள்ள மக்களிடையே படுவேகமாக குறைந்து வருகிறது. அதைச் சரி செய்ய அவர் எதாவது ஒன்றைச் செய்தே ஆக வேண்டும்.
இன்னும் சிலர் இங்குள்ள சீக்கிய கட்சியான புதிய ஜனநாயக கட்சி ஆதரவில் ட்ரூடோ அரசு இருப்பதால் அவர் இப்படிச் செய்வதாகச் சிலர் கூறுகிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை அதற்கு வாய்ப்புகள் குறைவு. உள்ளூரில் நிலவும் அரசியல் பிரச்சினைக்காக இவ்வளவு சீரியஸான கொலை விவகாரத்தில் ஒரு நாட்டையே யாரும் குற்றஞ்சாட்ட மாட்டார்கள். ஆனாலும், ஒருவரின் மரணத்தை தங்கள் சொந்த நலனுக்காகப் பயன்படுத்தும் அரசியல்வாதிகளைப் பார்த்தாலே கோபமாக இருக்கிறது.
விசாரணை: கனடாவின் குற்றச்சாட்டுகள் சர்வதேச அளவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கனடா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரிட்டிஷ் கொலம்பியாவில், குறிப்பாக சர்ரேயில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. கொலை சம்பவம் குறித்து இப்போது தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். போலீஸ் விசாரணையில் அரசியல் ரீதியான தலையீடுகள் இருக்க வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.
இதில் என்ன ஆதாரம் என்பதையே கேள்வியாகக் கேட்க வேண்டும். இதுபோன்ற உயர்மட்ட கொலைகளில் உங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் தகவல்கள் கிடைக்கும். அது உண்மையான குற்றச்சாட்டுகளா.. இல்லை போலி தகவல்களா என்பது குறித்தும் தீவிரமாக விசாரிக்க வேண்டும். இந்த கொலையில் என்ன பின்னணி என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஹர்தீப் சிங் கொலை விசாரணை ஆரம்பக் கட்டத்தில் தான் இருக்கிறது. போலீஸ் விசாரிக்கட்டும் அப்போது தான் உண்மை தெரியும்.
நடவடிக்கை தேவை: அதேநேரம் பயங்கரவாத குழுக்கள் சிலர் கனடாவில் இருந்து இயங்குவதும் தனி பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அவர்கள் போதைப் பொருள் மற்றும் ஆயுத விற்பனை மூலம் மிகப் பெரியளவில் சம்பாதிக்கிறார்கள். இதை எல்லாமும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். உள்நாட்டில் நடக்கும் இதுபோன்ற செயல்களைக் கனடா தடுத்து நிறுத்த வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications