ஒசாமாவை காட்டிக் கொடுத்த பாக். டாக்டரின் மாஜி வக்கீல் கொலை: 2 தீவிரவாத அமைப்புகள் பொறுப்பேற்பு
இஸ்லாமாபாத்: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை கண்டுபிடிக்க உதவிய பாகிஸ்தான் டாக்டரின் முன்னாள் வழக்கறிஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள அப்போத்தாபாத் நகரில் மறைந்திருந்த அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை கண்டுபிடிக்க அமெரிக்காவுக்கு உதவிய பாகிஸ்தானைச் சேர்ந்த டாக்டர் ஷகீல் அப்ரிதியின் முன்னாள் வழக்கறிஞர் சமியுல்லா அப்ரிதி. ஷகீலுக்காக வாதாடியதால் சமியுல்லாவுக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்திருந்தனர்.
ஒசாமாவை கண்டுபிடிக்க உதவிய டாக்டர் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி அந்நாட்டின் பழங்குடியின நீதிப்படி அவருக்கு கடந்த 2012ம் ஆண்டில் 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த ஆண்டு அந்த தண்டனை 23 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. ஷகீலுக்கு சட்ட உதவி செய்வதால் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது என்றும், அதனால் அவரது வழக்கில் இருந்து விலகுவதாகவும் சமியுல்லா கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சமியுல்லா மத்ரா என்ற கிராமத்திற்கு சென்றுவிட்டு தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரின் கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடினர். இந்த சம்பவத்தில் சமியுல்லா பலியானார்.
சமியுல்லாவை கொன்றது நாங்கள் தான் என்று ஜன்துல்லா என்ற தீவிரவாத அமைப்பும், பெஷாவரில் உள்ள பள்ளியில் தாக்குதல் நடத்தி 145 பேரை கொன்ற தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பும் தெரிவித்துள்ளது.