எல்லாமே பொய்! மாலத்தீவில் 1000 இந்திய வீரர்கள்? அடித்துவிட்ட அதிபர் முய்ஸு! கிளம்பிய கடும் எதிர்ப்பு
மாலே: மாலத்தீவு அதிபர் முய்ஸு இந்தியா குறித்து பொய்யான தகவல்களைக் கூறி வருவதாக அவரது சொந்த நாட்டிலேயே எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது.
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தியாவை விமர்சிக்கும் வகையிலேயே மாலத்தீவு அதிபர் முய்ஸு தொடர்ந்து கருத்துகளைக் கூறி வருகிறார்

இதற்கிடையே மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவை அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.
மாலத்தீவில் ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்கள் இருப்பதாக முய்ஸு பச்சையாகப் பொய் கூறி இருப்பதாகத் தெரிவித்த அப்துல்லா ஷாஹித், ஆயுதமேந்திய வெளிநாட்டு வீரர்கள் ஒருவர் கூட தங்கள் நாட்டில் இல்லை என்றும் தெரிவித்தார். மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவராக அப்துல்லா ஷாஹித் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை தற்போது அதிபராக இருக்கும் முய்ஸுவை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அவர் அதிபர் பதவிக்கு வந்து சுமார் 100 நாட்கள் ஆகும் நிலையில், ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது.. "ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்கள்' இருப்பதாக அதிபர் முய்ஸு கூறியுள்ளது அவரது பொய்கள் தொகுப்பில் மற்றொன்று அவ்வளவு தான்.. சரியாக எத்தனை வெளிநாட்டு ராணுவ வீரர்கள் உள்ளனர் என்பதைக் கூட தற்போதைய அரசால் வழங்க முடியவில்லை என்பதையே இது காட்டுகிறது. அதேநேரம் நமது நாட்டில் ஆயுதமேந்திய வெளிநாட்டு வீரர்கள் ஒருவர் கூட இல்லை.
எந்தவொரு விவகாரத்திலும் வெளிப்படைத்தன்மை முக்கியமானது என்பதால் எத்தனை வீரர்கள் இருக்கிறார்கள் என்ற உண்மை தற்போதைய அரசு சொல்ல வேண்டும். உண்மை தான் இறுதியில் வெல்லும்" என தெரிவித்துள்ளார்.
மாலத்தீவில் உள்ள இந்திய வீரர்களை அகற்றுவேன் என்பதை முன்னிறுத்தியே முய்ஸு கட்சி தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார். கடந்தாண்டு தேர்தலுக்கு முன்பே கூட அவர் இதை முன்வைத்தே பிரச்சாரம் செய்திருந்தார். அதேபோல அதிபரான உடனேயே அங்குள்ள இந்திய வீரர்களை அகற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தார். இந்தியாவிடம் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாகவும் தெரிவித்திருந்தார்.
தீவுகளின் கூட்டமான மாலத்தீவில் சிறு தீவு ஒன்றில் யாருக்காவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களை மருத்துவமனை உள்ள மற்ற தீவுக்கு அழைத்துச் செல்வது சிரமம்.. இதனால் மாலத்தீவுக்கு உதவும் வகையில் இந்திய ராணுவம் ஹெலிகாப்டர்களை வழங்கியது. அதை ஆபரேட் செய்யவும் பராமரிக்கவும் ராணுவத்தினர் மற்றும் மருத்துவ ஊழியர்கள் என சுமார் 70 முதல் 80 இந்தியர்கள் அங்கே உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாலத்தீவு அதிபராகப் பதவியேற்ற 2ஆவது நாளிலேயே, மாலத்தீவில் உள்ள தனது ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறுமாறு முய்ஸு இந்திய அரசிடம் அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்தார். கடந்த ஆண்டு டிசம்பரில், இந்திய அரசு உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்திய ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறுவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டதாக முய்ஸு கூறினார்.
இந்தியப் படைகளை வெளியேற்றுவது தொடர்பான ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட மாலத்தீவின் அதிகாரிகள் குழு டெல்லிக்கு வந்து இது தொடர்பாகப் பேச்சுவார்த்தையை நடத்தி இருந்தது. இரு தரப்பும் எட்டிய ஒப்பந்தத்தின்படி மூன்று விமான தளங்களில் ஒன்றில் உள்ள ராணுவ வீரர்கள் மார்ச் 10க்கு முன்பும், மீதமுள்ள இரண்டு தளங்களில் உள்ள ராணுவ வீரர்கள் மே 10க்கு முன்பும் திரும்பப் பெறப்படுவார்கள்.
இந்த மாத தொடக்கத்தில், நமது மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகமும் இது தொடர்பாக விளக்கம் அளித்து இருந்தது. அதாவது மாலத்தீவில் உள்ள விமான தளங்களில் உள்ள ராணுவ வீரர்களுக்குப் பதிலாக அங்கே திறமையான இந்தியத் தொழில்நுட்ப பணியாளர்களை இந்தியா நியமிக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications