'படகு வெடித்த' விவகாரம்: இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
இஸ்லாமாபாத்: குஜராத் அருகே நடுக்கடலில் படகு வெடித்த விவகாரத்தில் இந்தியா சர்வதேச விதியை மீறியுள்ளது என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
குஜராத் கடற்பரப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி நள்ளிரவில் பாகிஸ்தானைச் சேர்ந்த மர்ம மீன்பிடிப் படகு ஒன்று நுழைய முயன்றது. இந்த படகை இந்திய கடலோர காவல்படை நெருங்கிய போது படகில் இருந்த 4 பேர் அதன் கீழ் தளத்துக்கு சென்று வெடி வைத்து தகர்த்து உயிரிழந்தனர்.

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த இந்த படகு சம்பவம் குறித்து வடமேற்கு கடலோர காவல் படை தலைமை அதிகாரி பி.கே.லோசாலி அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், குஜராத் கடலோர பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் படகை நாங்கள் தகர்த்தோம் என்று கூறி இருந்தார். பின்னர் தான் அப்படி கூறுவில்லை என்று அவர் மறுத்தார்.
எனினும் அவருடைய முந்தைய கருத்தால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. இந்த சம்பவம் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறுகையில் இந்தியாவுக்குள் ஊடுருவியவர்கள் பாகிஸ்தானியர்கள்தான். நமது கடலோர காவல்படை அவர்களை துரத்திச் சென்று சரண் அடையும்படி கூறியபோது, அவர்கள் சரண் அடையாமல் படகை குண்டு வைத்து தகர்த்துக்கொண்டனர் என்று கூறி இருந்தார். இந்த சர்ச்சயை அடுத்தும் பாகிஸ்தான் படகு தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பாரிக்கர் கூறினார்.
இந்நிலையில் 'படகு விவகாரத்தில்' இந்தியா மீண்டும் சர்வதேச விதியை மீறியுள்ளது பாகிஸ்தான் சாடியுள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் அசிப் பேசுகையில், சர்வதேச விதியை மீறுவதை மீண்டும் இந்தியா நிரூபித்து உள்ளது. மனிதாபிமானம் இல்லாமல் அலட்சியமாக நடந்துகொண்டுள்ளது. சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ் விவகாரம் போன்று பாகிஸ்தான் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை மட்டும் இந்தியா சுமத்தவில்லை. படகில் இருந்த அப்பாவிகள் 4 பேர் மரணத்தில் தொடர்பு கொண்டுள்ளது. இந்தியா மீண்டும் தனது முகத்தை காட்டியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications