நைஜீரியாவிலிருந்து வெளியேற 4 இந்திய டாக்டர்களுக்கு அனுமதி
டெல்லி: நைஜீரியாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் 4 இந்திய டாக்டர்கள், தங்களது விருப்பத்தி்ற்கு மாறாக எபோலா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்குமாறு தாங்கள் வற்புறுத்தப்படுவதாகவும், மிரட்டப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது அவர்கள் விரும்பினால் தாயகம் திரும்பலாம் என அனுமதி தரப்பட்டுள்ளது.
முன்னதாக, தாங்கள் நாடு திரும்ப விரும்புவதாகவும், தங்களை தாயகம் அனுப்ப இந்திய தூதரகம் உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். தங்களது பாஸ்போர்ட்டுகளை மருத்துவமனை நிர்வாகம் பறித்துக் கொண்டுள்ளதாகவும், தாங்கள் வெளியேறக் கூடாது என்று மிரட்டுவதாகவும் அவர்கள் கூறியிருந்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நான்கு டாக்டர்களும் தலைநகர் அபுஜாவில் உள்ள பிரைமஸ் என்ற மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர். அங்கு பணியாற்றும் டாக்டர்கள் தங்களது பணியிலிருந்து வெளியேறக் கூடாது என்று மருத்துவமனை நிர்வாகம் பணித்துள்ளதாம். ஆனால் இந்த நான்கு இந்திய டாக்டர்களும் பணியில் தொடர விரும்பவில்லை. ஆனால் அவர்கள் வெளியேற மருத்துவமனை விரும்பவில்லை. மனித குலனின் நலனைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து பணியாற்றுமாறு நான்கு பேரையும் மருத்துவனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
அதேசமயம், அவர்களது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் அவர்களை மிரட்டவில்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது. இந்த விவகாரம் குறித்து தற்போது இந்தியத் தூதரகம் கையில் எடுத்துள்ளது. இந்திய டாக்டர்களுடன் தூதரக அதிகாரிகள் பேசினர். இரு தரப்பும் சுமூக உடன்பாட்டுக்கு வர முடிவு செய்திருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் கபில் செளகான், திணேஷ் குமார், லோகேஷ் சந்திரா, ராகேஷ் லக்ரா, ஹேமந்தர் ஜிங்கர் என்ற அந்த நான்கு டாக்டர்களும், விரும்பினால் தாயகம் திரும்பலாம் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.