இன்று தொடங்குகிறது ஜி20 மாநாடு.. இந்தோனேசியாவில் உலக தலைவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி
ஜகார்டா: இந்தோனேசியாவின் பாலி நகரில் இன்று ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு தொடங்க உள்ளது. இதற்காக இந்தோனேசியா சென்ற பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து ஆலோசிக்க உள்ளார்.
G 20 கூட்டமைப்பு நாடுகளின் 17 வது உச்சி மாநாடு இந்தோனோசியாவின் பாலி நகரில் இன்று தொடங்குகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டில் கூட்டமைப்பில் இடம்பெற்று உள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளார்கள்.
ஒன்றாக மீள்வோம், வலுவாக மீள்வோம் என்ற கொள்கையின் அடிப்படையில் இந்த ஜி 20 மாநாட்டில் உலக நாடுகளில் தலைவர்கள் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசிக்க உள்ளனர்.
ஜி20 உச்சி மாநாடு: இந்தோனேசியாவில் பிரதமர் மோடி- பாலி நகரில் இந்தியர்கள் பாடலுடன் உற்சாக வரவேற்பு!
முக்கிய விவகாரங்கள்
இந்த கூட்டமைப்பின் மாநாட்டில் கொரோனா பெருந்தொற்று, ஊரடங்கு, அதன் பின்னர் உலக நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இந்த கொள்கை அமைக்கப்பட்டதாக தெரிகிறது. இதில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் உலகில் நிலவும் பல்வேறு முக்கிய விவகாரங்கள், கொரோனா, பொருளாதாரம், பருவ நிலை, போர்கள், சர்வதேச பயங்கரவாதம் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
ஜி20 கூட்டமைப்பு
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சவூதி அரேபியா, இந்தியா, ரஷியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, அர்ஜெண்டினா, பிரேசில், மெக்சிகோ, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், சீனா, இந்தோனேசியா, தென் கொரியா ஆகிய நாடுகளை கொண்ட உலகின் சக்திவாய்ந்த கூட்டமைப்பாக ஜி20 உள்ளது.
ஜி 20 மாநாடு
குறிப்பாக சுகாதாரம், எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் நிதி பரிமாற்றம், ஆகிய 3 தலைப்புகளின் கீழ் இந்த ஜி 20 மாநாட்டில் மூன்று அமர்வுகள் நடைபெற உள்ளன. உலக தலைவர்கள் இந்த தலைப்புகளின் கீழ் விரிவாக விவாதிக்க உள்ளார்கள். இதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் பாலி நகருக்கு சென்று உள்ளார்கள். உக்ரைன் போர் காரணமாக ரஷிய அதிபர் புதின் இந்த மாநாட்டுக்கு செல்லவில்லை.
பிரதமர் மோடி
இந்த ஜி 20 நாடுகள் குழுவில் இடம்பெற்று இருக்கும் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தலைநகர் டெல்லியில் இருந்து இந்தோனேசியாவுக்கு புறப்பட்டு சென்றார். மாநாடு நடைபெறும் பாலி நகரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.
இரு தரப்பு பேச்சுவார்த்தை
இந்த மாநாட்டிற்கு வரும் உலக நாடுகளின் தலைவர்கள் இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்றும் நாளையும் பல்வேறு நாடுகளுக்கு இடையே பாலியில் இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் பைடனை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மோடி பேச்சுவார்த்தை
அதேபோல், பிரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதேபோல் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடனும் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
பைடன் - ஜின் பிங் சந்திப்பு
முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்கள். 3 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் ரஷியா போர் விவகாரம், தைவான் விவகாரம், திபெத் பிரச்சனை தொடர்பாக ஜி ஜின்பிங்கிடம் ஜோ பைடன் பேசி உள்ளார்.
இந்தியா தலைவர்
இந்த மாநாட்டின் இறுதியில் ஜி 20 நாடுகள் குழுவின் தலைவர் பதவி இந்தியாவிடம் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாடு இதன் தலைமை பதவியை ஏற்கும் நிலையில், 2023 ஆம் ஆண்டின் தலைமை பதவியை ஜி 20 நாடுகளின் மாநாட்டின் முடிவில் இந்தோனேசிய அதிபர், பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்குகிறார். இதனை அடுத்து வரும் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் ஜி 20 நாடுகளின் மாநாடு நடைபெறும்.