அடுத்தது நீதான்... மலேசிய விமான பயணியின் தோழிக்கு சீனாவிலிருந்து வந்த கொலை மிரட்டல்
சிட்னி: மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்தவரின் பெண் தோழி, தனக்கு குறிப்பிட்ட ஒரு சீன தொலைபேசி எண்ணில் இருந்து தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக புகார் அளித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி ஐந்து இந்தியர்கள் உட்பட 239 பேருடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு புறப்பட்டுச்சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் திடீரென நடுவானில் மாயமானது. அந்த விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.
இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்ற யூகத்தின் பேரில், ‘புளுபின்-21' என்ற நீர்மூழ்கி ‘ரோபோ'வை கொண்டு நடந்துவரும் தேடுதல் வேட்டையிலும் பலன் இல்லை.
ஆனபோதும், மாயமான விமானத்தைக் குறித்து தொடர்ந்து முரண்பட்ட தகவல்கள் வெளி வருவது குழப்பத்தை அதிகரிப்பதாகவே உள்ளது.
கொலை மிரட்டல்...
இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்த அமெரிக்க பயணியான பிலிப் வூட் என்பவரது தோழி சாரா விமானம் மாயமானதிலிருந்து தனக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வருவதாக தெரிவித்துள்ளார்.
சீன எண்...
இந்த கொலை மிரட்டல்கள் எல்லாம் குறுந்தகவல்களாக குறிப்பிட்ட சீன எண் ஒன்றிலிருந்து வருவதாக சாரா கூறியுள்ளார். விமானத்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தது நீ தான்..
அடுத்ததாக உன்னை கொல்ல போகிறோம் என அந்த குறுந்தகவலில் மிரட்டல் விடுக்கப் படுவதாக சாரா தெரிவித்துள்ளதாக இணையதள செய்திகள் தெரிவிக்கின்றன.
பீஜீங்...
சாரா தற்போது பீஜிங்கில் உள்ளார். முன்னதாக அவர் தனது ஆண் நண்பர் பிலிப்புடன் வாழ பீஜிங்கில் இருந்து வெளியேற திட்டமிருந்தார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்.பி.ஐ எச்சரிக்கை...
சாரா அளித்த புகாரின் அடிப்படையில் அந்த குறிப்பிட்ட எண்ணிற்கு எப்.பி.ஐ எச்சரிக்கை விடுத்ததாகவும், அதனைத் தொடர்ந்து தற்போது மர்ம அழைப்புகள் நின்றுள்ளதாகவும் அந்த செய்தியில் சாரா குறிப்பிட்டுள்ளார்.
அல்கொய்தா தீவிரவாதிகள்...
ஏற்கனவே, மலேசிய விமானம் மாயமான விவகாரம் தொடர்பாக அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகள் 11 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.