அத்தியாவசிய ஊழியர்கள் சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய கனடா பிரதமர்! குறைந்தபட்ச ஊதியமே ரூ. 1.35 லட்சம்
டொரோன்டோ: கனடா நாடு முழுவதும் உள்ள அத்தியாவசிய தொழிலாளர்களுக்கான ஊதியத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளார், அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
"இந்த நாட்டை வழிநடத்த நீங்கள் உங்கள் உடல்நலத்தை பணயம் வைத்து செயல்படுகிறீர்கள், ஆனாலும், குறைந்த ஊதியத்தை சம்பாதிக்கிறீர்கள். நீங்கள் உயர்வுக்கு தகுதியானவர்கள்" என்று கூறியுள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
ட்ரூடோ அரசு மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுடன் ஒரு ஒப்பந்தம் கொண்டுவந்துள்ளது. 3 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டம் இது.

1.35 லட்சம்
அத்தியாவசிய தொழிலாளர்களுக்கான அடிப்படை ஊதியத்தை மாதத்திற்கு 1,800 டாலருக்கும் குறைவாக இருக்க கூடாது என்னும் வகையில், இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது, 1,35,963 ரூபாய் அளவுக்கானது.

பிரதமர் ட்ரூடோ
"இந்த தொற்றுநோயால் நாம் காணும் ஒரு விஷயம் என்னவென்றால், நமது சமூகத்தில் பெருமளவில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய, மற்றும் பிற வழிகளில் பாதிக்கப்படக்கூடிய நபர்கள் இருக்கிறார்கள், அவர்கள் நம் சமூகத்தின் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்" என்று ட்ரூடோ கூறியுள்ளார்.

பையில் பணம்
கனடாவின் மிகப் பெரிய சுகாதாரப் பாதுகாப்பு சங்கம், சுமார் 60,000 தொழிலாளர்களை கொண்டது. அந்த சங்கம், பிரதமரின் அறிவிப்பை வரவேற்றது. ஆனால் அறிவிப்பு செயலாக்கம் பெற வேண்டும், தொழிலாளர்கள் விரைவில் தங்கள் பைகளில் பணத்தைப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

அச்சம் நீக்க தேவை
"அத்தியாவசிய தொழிலாளர்கள் இப்போது பயந்து போய் இருக்கிறார்கள். இந்த நிலையில், பிரதமர் அறிவிப்பை கேட்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் அறிவிப்பு செயல்பாட்டுக்கு வருவதை அவர்கள் பார்க்க விரும்புகிறார்கள்" என்று SEIU ஹெல்த்கேர் சங்கத்தின் தலைவர் ஷர்லீன் ஸ்டீவர்ட் கூறினார்.

குறைந்த சம்பளம்
கோவிட் -19 பிரச்சினையால், தங்கள் சங்கத்தைச் சேர்ந்த மூன்று சுகாதாரப் பணியாளர்கள் இறந்துவிட்டதாகவும், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது ஒரு தொடர்ச்சியான பிரச்சினையாக இருந்து வருவதாகவும், ஸ்டீவர்ட் கூறினார். நமது உயிரைக் காப்பாற்றவும், நம்முடைய அன்புக்குரியவர்களைப் பராமரிக்கவும் உதவும் அத்தியாவசிய சேவைத் தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியம் பெறுபவர்களாக இருக்கிறார்கள். நமது வாழ்க்கை அவர்களைப் பொறுத்தது என்றும் ஸ்டீவர்ட் கூறினார்.

முன்னுதாரணமாக மாறிய கனடா
அத்தியாவசிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வை அறிமுகம் செய்துள்ள கனடா பிரதமரின் உத்தரவு பிற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாகும். அரசு ஊழியர்கள் சம்பளத்தை பிடித்தம் செய்யும் நாடுகளுக்கு மத்தியில், கனடா முன்னுதாரணமாக திகழ்கிறது. பிற நாடுகளும் இதிலிருந்து பாடம் கற்கலாம்.












Click it and Unblock the Notifications