நல்ல தீவிரவாதம், கெட்ட தீவிரவாதம்- இது வேலைக்கு ஆகாது: துபாயில் மோடி உரை
துபாய்: துபாயில் இந்தியர்கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கடின உழைப்பையும், தாய் நாடு மீது அவர்கள் வைத்துள்ள பாசத்தையும் பாராட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதலில் அபுதாபிக்கு சென்ற அவர் நேற்று துபாய் சென்றார். அங்கு தொழில் அதிபர்கள், அரசு அதிகாரிகளை சந்தித்து பேசினார். அதன் பிறகு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அவரது உரையின் சிறப்பு அம்சங்கள் வருமாறு,
குட்டி இந்தியா
நான் இங்கு என் கண் முன்பு ஒரு குட்டி இந்தியாவை பார்க்கிறேன். நீங்கள் எல்லாம் ஆண்டுக் கணக்கில் கடுமையாக உழைத்து நம்மை எல்லாம் பெருமை அடையச் செய்துள்ளீர்கள்.
இந்தியா
இந்தியாவில் பிரச்சனை என்று வந்தால் உடனே நீங்கள் உதவிக்கரம் நீட்டுகிறீர்கள். இந்தியாவில் மழை பெய்தால் நீங்கள் எங்களுக்கு குடை கொடுக்கிறீர்கள்.
வளைகுடா நாடுகள்
வாஜ்பாயி இந்திய பிரதமராக இருக்கையில் அணு ஆயுத சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனைகளை நடத்த அவர் நிதியுதவி கேட்டார். அப்போது வளைகுடா நாடுகளில் இருந்து தான் பெரிய அளவில் நிதியுதவி கிடைத்தது.
அன்பு
இங்கு என் மீது காட்டப்படும் அன்பும், மரியாதையும் ஒருவருக்கானது அல்ல. மாறாக இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கானது ஆகும்.
தீவிரவாதம்
நல்ல தாலிபான், கெட்ட தாலிபான், நல்ல தீவிரவாதம், கெட்ட தீவிரவாதம் எல்லாம் வேலைக்கு ஆகாது. நீங்கள் தீவிரவாதத்துடனா அல்லது மனிதநேயத்துடனா என்பது குறித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும்.