நாங்களும் இந்தியாவும் நெருங்குவதைப் பார்த்து பயப்படாதீங்க.. சீனாவுக்கு ஒபாமா "ஆறுதல்"!
வாஷிங்டன்: இந்தியாவுடன் அமெரிக்கா நல்லுறவு வைத்திருப்பதற்காக சீனா அச்சப்பட தேவையில்லை என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.
ஒபாமாவின் இந்திய வருகை மற்றும் இந்தியா-அமெரிக்கா நடுவே போடப்பட்ட ஒப்பந்தங்களால் அதிருப்தியடைந்துள்ள சீனா, இந்தியா எச்சரிக்கையாக இருந்து அமெரிக்க சதிவலையில் இருந்து தப்பித்துக்கொள்ளுமாறு தனது ஊடகங்கள் மூலம் கட்டுரை வெளியிடச் செய்தது.
சீனாவுக்கு ஏன் பயம்?
இந்நிலையில், அமெரிக்காவின், சிஎன்என் தொலைக்காட்சி, கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் ஒபாமா பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சீன அரசின் பேச்சுக்களை பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன். இந்தியாவுடன், அமெரிக்கா நல்ல உறவை வைத்திருப்பதற்காக சீனா அச்சப்பட தேவையில்லை.
அனைத்து நாடுகளுக்கும் பலன்
அனைத்து நாடுகளுமே தங்களுக்கு நலன் கிடைக்கும் செயல்களில் இறங்குவது சகஜம். இரு நாடுகள் இணையும்போது இரு நாட்டு மக்களுக்கே அதனால் நன்மை கிடைக்க வேண்டும். அமெரிக்கா தனது நாட்டு மக்களின் வளத்தை பெருக்கவே ஆசைப்படுகிறதே தவிர, பிற நாடுகளை செலவீனத்துக்கு உட்படுத்துவதை விரும்பவில்லை.
சீனாவின் வளர்ச்சி, அமெரிக்காவுக்கு மகிழ்ச்சி
சீனா அமைதியான முறையில் வளர்ச்சியடைவதையே அமெரிக்காவும் விரும்புகிறது. சீனாவின் வளர்ச்சி சிறப்பாக இருந்தால் அது அமெரிக்காவுக்கும் பலன் தரும்.
சிறு நாடுகளை சீனா சீண்ட கூடாது
நான் அதிபரான காலம் முதல் ஒரு விஷயத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். சீனாவின் வளர்ச்சி பிற நாடுகளை நசுக்குவதாக அமைந்துவிட கூடாது என்பதுதான் எனது வலியுறுத்தல். சிறு நாடுகளான வியட்நாமையோ அல்லது பிலிப்பைன்சையோ, சீனா நசுக்க கூடாது. கடல்சார் பிரச்சினைகள் இருந்தால் கூட அதை சர்வதேச சட்டத்தின்கீழ்தான் கொண்டுவர வேண்டுமே தவிர, தானாக முன் சென்று சிறு நாடுகளை சீனா மிரட்ட கூடாது.
இந்தியாதான் நெருங்கிய தோழன்
சீனாவைவிட இந்தியாவிடம் அமெரிக்கா நெருக்கமாக இருக்க, எங்கள் இரு நாடுகளிலும் நிலவும் ஜனநாயகமும் ஒரு காரணம். பல்வேறு வகையிலும் அமெரிக்கா-இந்தியா நடுவே ஒற்றுமை உள்ளது. இதை அமெரிக்கர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அந்த விஷயங்களில் சீனாவால் நெருங்க முடியவில்லை. இவ்வாறு ஒபாமா கூறியுள்ளார்.