அமெரிக்காவைப் புரட்டிப் போட்ட 'ஜூனோ'.. 3 அடி அளவுக்கு ஐஸ் கட்டிகள்... எங்கு பார்த்தாலும் வெள்ளம்!
பாஸ்டன்: அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதிகளில் புனிப் புயல் ஜூனோ சுழற்றியடித்து வருகிறது. அங்கு பல பகுதிகளில் பனிக் கட்டிகளாக குவிந்து கிடக்கின்றன. பல பகுதிகளில் மழை வெள்ளமாகவும் உள்ளது.
கனக்டிகட், ரோட் தீவு, மாசசூசட்ஸ், நியூ ஹாம்ப்ஷயர், மெய்ன் மாகாணங்களில் கடும் பனிப் புயல் வீசி வருகிறது. பல கடலோர நகரங்களில் தடுப்புச் சுவர்கள் உடைந்தன பல நகரங்களில் 36 இன்ச் அளவுக்கு ஐஸ் கட்டிகள் மூடியிருக்கின்றன. மாசசூசட்ஸ் மாகாணத்தில் பல நகரங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
பெரும் சிரமத்தை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூயார்க் நகரம் பேரபாயத்திலிருந்து தப்பியது. அங்கு பெரும் பாதிப்பை புயல் இதுவரை ஏற்படுத்தவில்லை.
மாசசூசட்ஸ் மாகாணத்தில் 30,000 பேர் மின் விநியோகம் இல்லாமல் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இருப்பினும் அந்த மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் வாகனங்களை ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல நியூயார்க், ரோட் தீவு, கனக்டிகட் மாகாணங்களிலும் வாகனம் ஓட்டுவதற்கான தடை நீங்கியுள்ளது.
கடும் காற்றுடன் பனிப் புயல் வீசுவதோடு மழையும் சுழற்றியடித்ததால் பல பகுதிகளில் வெள்ளக் காடாக இருந்தது. கடல் கொந்தளிப்பும் பல பகுதிகளில் காணப்பட்டது. இதனால் பல இடங்களில் கடலோரங்களில் அமைக்கப்பட்டிருந்த வெள்ளத் தடுப்புச் சுவர்கள் உடைந்தன. இன்றைக்குள் புயல் தீவிரம் குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் சற்று நிம்மதியாக உள்ளனர்.
புயல் வீசி வரும் பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்தும் பனிப் போர்வையால் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் விடப்பட்ட கார்கள், வாகனங்கள் பனிக் கட்டிக்குள் புதைந்து போயுள்ளன.
கனக்டிகட், மெய்ன், மாசசூசட்ஸ், நியூ ஹாம்ப்ஷயர், ரோட் தீவு மற்றும் நியூயார்க்கின் ஒரு பகுதி இந்த பனிப் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் 30 இன்ச் அளவுக்கு பனிக் கட்டிகள் குவிந்து கிடக்கின்றன. மின்சாரம் பல பகுதிகளில் இல்லை, வாகனங்களை ஓட்ட முடியவில்லை. பனிக் கட்டிகளையும் அகற்ற முடியவில்லை.
மாசசூசட்ஸ் மாகாணம்தான் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. அங்குள்ள லுனன்பர்க் நகரம் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. இங்கு எங்கு பார்த்தாலும் பனிக் கட்டி மலையாக காணப்படுகிறது.
பாஸ்டன் நகரில் 26 இன்ச் அளவுக்கு பனிக் கட்டிகள் தெருக்களில் குவிந்து கிடக்கின்றன. இங்கு மணிக்கு 30 மைல் வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்றும் வீசியது.
மார்ஷ்பீல்ட், சிசுவேட் ஆகிய கடலோர நகரங்களில் 30,000க்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டனர். யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று மாசசூசட்ஸ் மாகாண ஆளுநர் சார்லி பேக்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.