மோடி செய்த 2 அவசர கால்! கிரீன் சிக்னல் தந்த புடின், செலன்ஸ்கி! உக்ரைன் சுமியில் நடந்த பரபர Operation
மாஸ்கோ: உக்ரைனில் போர் தீவிரமாக நடந்து வரும் சுமி நகரில் இருந்து 700 இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர். இதற்கு பின் சிறப்பான ஆபரேஷன் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உக்ரைனில் ரஷ்யா கடுமையான தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் அங்கிருக்கும் இந்திய மாணவர்களை வெளியேற்றும் பணிகள் தீவிரம் அடைந்து வருகின்றன. ஆபரேஷன் கங்கா மூலம் ஏற்கனவே அங்கிருந்து இந்திய மாணவர்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே கீவ் நகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர்.
இன்னொரு பக்கம் கார்கிவ் நகரில் கடுமையான தாக்குதல்கள் நடந்த நிலையில் போருக்கு இடையில் அங்கிருந்த இந்தியர்களும் மீட்கப்பட்டு உள்ளனர். தற்போது சுமி நகரத்தில் இருக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒரு முடிவுக்கு வாங்க.. உக்ரைனில் கதிகலங்கும் மக்கள்.. 3வது போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா..!
மோடி போன் கால்
சுமி நகரத்தில் இருக்கும் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்ட போதுதான் பிரதமர் மோடி அந்த இரண்டு போன் கால்களை மேற்கொண்டார். முதல் போன் கால் ரஷ்ய அதிபர் புடினுக்கு சென்றது. இரண்டாவது போன் கால் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கிக்கு சென்றது. இரண்டு போன் கால்களும் சேர்த்து சுமார் 1 மணி நேரம் நீடித்தது. கடந்த திங்கள் கிழமை பிரதமர் மோடி இந்த போன் காலை மேற்கொண்டார். இங்கு மொத்தம் 700 இந்திய மாணவர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கிரீன் சிக்னல்
பிரதமர் மோடி இந்த போன் காலில் இரண்டு நாடுகளுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தை குறித்து பேசினார். அதன்பின் சுமி நகரத்தில் சிக்கி இருக்கும் இந்தியர்களை பற்றி பேசியதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த போன் காலில் இரண்டு நாட்டு தலைவர்களும் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற ஒப்புக்கொண்டு உள்ளனர். இரண்டு நாட்டு தலைவர்களும் இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற "safe passage" அமைக்க ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
கடைசி முயற்சி
சுமியில் இருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற பிரதமர் மோடி மேற்கொண்ட கடைசி முக்கியமான முயற்சி இது என்று கூறப்படுகிறது. இது மட்டுமின்றி இன்னொரு பக்கம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கரும் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்களிடம் போனில் பேசி இது குறித்து ஆலோசனை செய்தார். இதிலும் இந்திய மாணவர்கள் சுமியில் இருந்து வெளியேற பாதுகாப்பான வழி ஏற்படுத்தித்தரப்படும் என்று இரண்டு நாட்டு அரசும் உறுதி அளித்துள்ளது. பிரதமர் மோடியின் இந்த போன் காலை தொடர்ந்தே இங்கு பாதுகாப்பான மீட்பு வழி ஒன்றை ஏற்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.
சந்தேகம்
ஆனாலும் நேற்று காலை வரை இங்கு பாதுகாப்பான வழி ஏற்படுத்தப்படுமா என்ற கேள்வி நிலவியது. ஏனென்றால் இங்கு ரஷ்யா தொடர்ந்து ஏவுகணைகளை வீசிக்கொண்டு இருந்தது. அதேபோல் ஷெல் குண்டுகளையும் வீசிக்கொண்டு இருந்தது. இதனால் கடைசி நேரத்தில் பல்வேறு போன்கால்கள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல் மாணவர்கள் யாரும் சமூக வலைத்தளங்களில் எதுவும் போஸ்ட் செய்ய கூடாது, வீடியோ போட கூடாது என்றும் அறிவுரை வழங்கப்பட்டது.
தனி டீம்
இதையடுத்தே நேற்று காலை உக்ரைனில் சில மணி நேரங்கள் போரை நிறுத்த ரஷ்யா ஒப்புக்கொண்டது. உக்ரைனில் சுமி உள்ளிட்ட நகரங்களில் சில மணி நேரங்கள் தாக்குதல் நடத்தாமல் அமைதியை கடைபிடிக்க ரஷ்யா முடிவு செய்தது. இதையடுத்து சுமிக்கு இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளின் குழு ஒன்றும் அனுப்பப்பட்டது. ஆனால் அங்கு பேருந்துகளை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இடையில் போர் நடக்கும் பகுதிகள் இருப்பதால் நீண்ட தூரம் பயணிக்க பேருந்து டிரைவர்கள் மறுத்து உள்ளனர்.
டிரைவர்கள் கஷ்டம்
இதையடுத்து அங்கு இருக்கும் லோக்கல் அதிகாரிகள் மூலம் பேருந்துகளை ஏற்பாடு செய்யும் பணிகள் செய்யப்பட்டன. பின்னர் உக்ரைன் ராணுவம் மூலம் சில பேருந்து ஓட்டுனர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு எல்லைக்கு பேருந்துகளை இயக்க சூழ்நிலை உருவாக்கப்பட்டது. அங்கு இருக்கும் லோக்கல் காண்டாக்ட்கள் மூலம் பேருந்துகள் ஒருவழியாக ஏற்பாடு செய்யப்பட்டது. வழியில் சில சாலைகள் சேதம் அடைந்து இருந்ததாலும், பாலங்கள் உடைந்து இருந்ததாலும் பல்வேறு சுற்று பாதைகள் வழியாக பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டது.
Recommended Video
கடைசி திருப்பம்
இதையடுத்து சுமியில் இருந்து நேற்று காலை புறப்பட்ட 12 பேருந்துகள் நேற்று மாலை உக்ரைன் மேற்கு எல்லைக்கு வந்தது. மொத்தம் 700 பேர் இந்த பேருந்துகளில் சுமியில் இருந்து மேற்கு எல்லைக்கு கொண்டு வரப்பட்டனர். நேற்று இரவு மேற்கு உக்ரைன் எல்லைக்கு வந்தவர்கள் இரவு நேரத்தில் ரோமானியா எல்லையில் நுழைந்தனர். அங்கு தற்காலிகமாக தங்கிய இந்திய மாணவர்கள் இன்று காலை ஆவணங்கள் சரி பார்க்கப்பட்ட பின் விமானங்களில் ஏற உள்ளனர். இவர்களுக்கான சிறப்பு விமானங்கள் வரும் மார்ச் 10 அதிகாலை மற்றும் 11ம் தேதி ஏற்பாடு செய்யப்பட உள்ளது. அதன் மூலம் இவர்கள் இந்தியா கொண்டு வரப்பட உள்ளனர்.