மெக்சிகோவை மிரட்டும் பாட்ரீசியா புயல்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
மெக்சிகோ: மெக்சிகோ நாட்டில் கடுமையான புயல் மழை தாக்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.பசிபிக் கடலில் மையம் கொண்டுள்ள பாட்ரீசியா புயல், மெக்சிகோ நாட்டில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவில் பெரும் சேதத்தை விளைவிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பசிபிக் கடலில் மையம் கொண்டிருக்கும் பாட்ரீசியா புயல் வலுவடைந்து ஆபத்தான புயலாக மாறியுள்ளது. இதையடுத்து இப்புயலுக்கு எச்சரிக்கை எண் 5 வழங்கப்பட்டுள்ளது. மஞ்சனிலோ துறைமுகத்திலிருந்து தெற்கில் 360 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல் மெதுவாக நகர்ந்து வருகிறது. புயலின் காரணமாக மாலைக்குப் பின்னர் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை உருவான புயல்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்த புயலாக கருதப்படும் பாட்ரீசியா புயல் மெக்சிகோவை எந்த நேரத்திலும் தாக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாட்ரீசியா புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 325 கி.மீ. வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும் என கூறப்பட்டது. எனினும், கரையை கடக்கும் முன்பே அது சற்று பலவீனமடைந்ததாலும் அதன் தீவிரம் குறையவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள், கடலோரப்பகுதிகளில் வசிப்பவர்கள், மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.