மோடியைக் கண்டு பயம் கிடையாது.. வம்பு பேச்சுக்கு வக்காலத்து வாங்கும் பிலாவல் பூட்டோ
இஸ்லாமாபாத்: பிரதமர் மோடி குறித்த தரம் தாழ்ந்த கருத்துக்களை கூறி கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ தனது கருத்தை நியாயப்படுத்தும் வகையில் மீண்டும் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா குறித்து சர்வதேச மன்றங்களில் அவதூறு பரப்புவதை வாடிக்கையாக பாகிஸ்தான் கொண்டுள்ளது.
குறிப்பாக காஷ்மீர் பிரச்சினையையும் மூன்றாம் தரப்பு நாடுகளிடம் எழுப்பி மூக்குடைப்பட்டு வருகிறது. இருந்தாலும் பாகிஸ்தான் திருந்தியதாக தெரியவில்லை.

இந்தியா - பாகிஸ்தான்
பாகிஸ்தானின் இதுபோன்ற பேச்சுக்களுக்கு இந்தியாவும் உரிய பதிலடியை கொடுக்கத் தவறுவது இல்லை. அதுபோலத்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஐநா பாதுகாப்பு அவையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில் பாகிஸ்தானை குற்றம் சாட்டி பேசியிருந்தார். அதாவது, பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மையமாக இருப்பதாகவும்.. ஓசாமா பின்லேடன் போன்ற சர்வதேச பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது போன்ற அந்த நாட்டின் பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் செயல்களை சுட்டிக்காட்டி பேசினார்.

மோடியை விமர்சித்து பேச்சு
ஜெய்சங்கரின் இந்த பேச்சு குறித்து செய்தியாளர்களிடம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ பேசினார். அப்போது, பிலாவல் பூட்டோ பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். அதாவது குஜராத்தின் கசாப்பு கடைக்காரர் என்ற அர்த்தம் தொனிக்கும் வார்த்தையை பயன்படுத்தியிருந்தார். மேலும், இந்திய பிரதமர் மோடியும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் ஹிட்லரின் நாசி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று பேசியிருந்தார்.

ஆர்.எஸ்.எஸ்-க்கு பயப்பட மாட்டேன்
பிலாவல் பூட்டோவின் இந்தக் கருத்துக்களுக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாகிஸ்தான் தரம் தாழ்ந்த கருத்துக்களை கூறி வருவதாக இந்தியா விமர்சித்து இருந்தது. பிலாவல் பூட்டோவின் கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில், தனது கருத்தை நியாயப்படுத்தும் வகையில் பிலாவல் பூட்டோ மீண்டும் பேசியிருப்பது சலசலப்பை எற்படுத்தியுள்ளது. பிலாவல் பூட்டோ கூறுகையில், "நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். பிரதமர் மோடிக்கோ... ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கோ.. அல்லது பாரதிய ஜனதா கட்சிக்கோ நான் பயப்பட மாட்டேன்.

நாங்கள் அஞ்ச மாட்டோம்
நான் இரண்டு தினங்களுக்கு முன்பாக கூறிய கருத்துக்கள் வரலாற்றை அடிப்படையாக கொண்டே பேசினேன். எனவே இதை மறைக்க முடியாது. பாகிஸ்தானை அச்சுறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படி போராட்டங்களை முன்னெடுத்தால் அது கைகூடாது. அவர்கள் விரும்பினால் போராடட்டும். ஆனால் நாங்கள் அஞ்ச மாட்டோம்" என்று பேசியுள்ளார்.

பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதற்கான முயற்சி
முன்னதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மும்தாஜ் ஜாரா பலூச் இது தொடர்பாக பேசியிருந்தார். அவர் கூறியதாவது: "குஜராத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற கொடூரங்களை மறைக்க இந்திய அரசு மறைக்க முயற்சி செய்கிறது. குஜராத்தில் நடைபெற்ற அந்த கொலைகளுக்கு பின்னணியில் செயல்பட்டவர்கள் நீதியில் இருந்து தப்பி, தற்போது முக்கிய அரசு பதவிகளில் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதற்கான முயற்சிகள் தோல்வி அடைந்து இருப்பதால் விரக்தியில் உள்ள இந்தியா இதுபோன்ற போராட்டங்களை முன்னெடுக்கிறது" என்று கூறியிருந்தார்.

ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது
முன்னதாக பிலாவல் பூட்டோவின் சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. உத்தர பிரதேசம், மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவினர் பிலாவல் பூட்டோவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தும் அவரது உருவ பொம்மையை எரித்தும் தங்கள் எதிர்ப்பை காட்டினர். மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்களும் பிலாவல் பூட்டோவின் தரம் தாழ்ந்த கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என மிககடுமையான கண்டனங்களை பதிவு செய்து இருந்தனர்.












Click it and Unblock the Notifications