ஈரானிடம் அணு குண்டுகளா? எந்தவொரு ஆதாரமும் இல்லை.. சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் பரபர
டெல் அவிவ்: இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதல் ஒரு வாரத்திற்கு மேலாகத் தொடர்கிறது. ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முயல்வதாகவே சொல்லி இஸ்ரேல் இந்த தாக்குதலை ஆரம்பித்தது. அமெரிக்காவும் இதற்கு முழு சப்போர்ட் செய்து வருகிறது. இந்தச் சூழலில் ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் நோக்கத்திலேயே இல்லை என்று சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் கிரோஸ்ஸி கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த ஒரு வாரமாகச் சண்டை தொடர்கிறது. ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருவதாகவும் இன்னும் சில காலத்தில் ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் என்றும் இது பிராந்தியத்தை ஆபத்தில் தள்ளும் என்பதால் அதை அனுமதிக்க மாட்டோம் எனச் சொல்லியே ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

சர்வதேச அணுசக்தி முகமை தலைவர்
இதற்கிடையே IAEA எனப்படும் சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் கிரோஸ்ஸி கூறியுள்ள கருத்துகள் முக்கியத்துவம் பெற்றது. அதாவது ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கும் நோக்கத்தில் இல்லை என்று ரபேல் கூறியதாக ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்தியாவிற்கான ஈரான் தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கும் நோக்கத்தில் இல்லை என்பதைச் சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் கிரோஸ்ஸி ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் பிரஸ் டிவி வெளியிட்ட அந்த வீடியோவில் ரஃபேல் கிரோஸ்ஸி நேர்காணல் குறித்த தகவல்கள் இடம் பெற்று இருக்கிறது.
ஆதாரம் இல்லை
அதில் ஈரானின் அணு ஆயுதங்கள் குறித்து கேள்விக்குப் பதிலளித்த கிரோஸ்ஸி, "ஈரான் ஒரு அணு ஆயுதத்தை நோக்கி நகர்வதற்கான எந்தவிதமான ஆதாரமும் எங்களிடம் இல்லை என்பதையே நாங்கள் தெரிவித்தோம்" எனக் கூறினார். ஈரான் விஞ்ஞானிகள் அணு ஆயுத வடிவமைப்பில் வெற்றிகரமான சோதனைகளை நடத்தியதாகவும், இது அணுகுண்டு தயாரிக்கும் திறனை ஈரான் நெருங்கிவிட்டதையுமே காட்டுவதாக டைம்ஸ் ஆப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டிருந்தது. அது குறித்த கேள்விக்கே ரஹேல் இந்த பதில்களை அளித்திருந்தார்.
ஏன் முக்கியம்
ரபேலின் இந்த நேர்காணல் இப்போது முக்கியத்துவம் பெறுகிறது. ஏனென்றால் இப்போது மத்திய கிழக்கில் ஈரான் மீதான போருக்கு முக்கிய காரணமே அவர்கள் அணு ஆயுதங்களைத் தயாரித்து வருகிறார்கள் என்பது தான். அமெரிக்காவும் கூட ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைத் தடுக்க வேண்டும் என்றே திரும்ப திரும்ப கூறி வருகிறது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் கூறுகையில், "ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்பதில் டொனால்ட் டிரம்ப் உறுதியாக இருந்தார். ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க முடியாது என்பது தெளிவானது. டொனால்ட் டிரம்ப் அதிபராக இருக்கும் வரை ஈரானை அணு ஆயுதம் வைத்திருக்க அனுமதிக்கப்படாது" என்று கூறியிருந்தார்.
இஸ்ரேல் ஈரான்
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர், "ஈரானில் உள்ள மிக முக்கியமான இலக்குகளைத் தாக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது" என்று கூறியிருந்தார். மேலும், ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க நெருங்கிவிட்டதாகவும் அது உலகிற்கே ஆபத்து என்பது போலவும் கூறியிருந்தார்.
இந்த சூழலில் ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கும் நோக்கத்திலேயே இல்லை என்று சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் கூறியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications