ஹெச்.1 பி விசாக்காரர்கள் கவலைப்பட தேவையில்லை... அமெரிக்க குடியுரிமை வழக்கறிஞர் தகவல்! Exclusive
டல்லாஸ்(யு.எஸ்):அமெரிக்காவின் பிரபல குடியுரிமை வழக்கறிஞர்களின் ஒருவரான கேரி டேவிஸ், ஹெச் 1 பி விசாக்காரர்கள் கவலைப்பட தேவையில்லை என்று கூறியுள்ளார்.
மெட்ரொப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கேரி டேவிஸ், தற்போதைய குடியுரிமை விவகாரம் குறித்து பேசினார்.
குடியுரிமை சட்ட அமலாக்கத்தைப் பொறுத்தவரையில் அதிபர் ஒபாமா ஆட்சியிலும் அதிபர் ட்ரம்ப் ஆட்சியிலும் மிகப்பெரிய மாறுதல்கள் இல்லை.. இருவரின் அணுகுமுறையில் தான் வித்தியாசாம் இருக்கிறது என்றார்.
விதிகளை தீவிரமாக அமல்படுத்திய ஒபாமா
ஒபாமாவின் முதல் நான்காண்டு காலத்தில் குடியுரிமைச் சட்ட விதிகளை மிகவும் தீவிரமாக அமல்படுத்தினார். கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
சட்டபூர்வமற்ற முறையில் குடியேறியவர்களை நாடு கடத்தியவர்களில் முதலிடம் ஒபாமாவுக்குத் தான். ஹெச் 1 பி விசா சட்டங்களையும் கடுமையாக பின்பற்றச் செய்தார்.
கேள்விகள், விசாரணைகள், விசா மறுப்பு, 100 சதவீத களஆய்வு என விசா அனுமதி பெறுவதை மிகவும் கடுமையாக்கினார்.
இரண்டாவது முறையாக போட்டியிடுவதற்கு ஆறேழு மாதங்களுக்கு முன்பாக, சட்டபூர்வமற்றமுறையில் பெற்றோருடன் குடியேறிய குழந்தைகளுக்கு அனுமதி வழங்கும் DACA என்ற சட்டத்தை இயற்றினார்.
அதன் மூலம் அவருடைய மறுதேர்தல் வெற்றி எளிதானது. முற்பகுதியில் குடியுரிமை சட்டம் அமலாக்கத்தில் மிகவும்கடுமையாக நடந்து கொண்டால் கூட அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அது குறித்து அவர் எதிர்மறையாக பேசியதே இல்லை
ஒபாமா வழிதான் ட்ரம்ப் வழியும்
அதிபர் ட்ரம்பும் , ஒபாமவைப் போல் , ஆட்சியின் தொடக்கத்தில் கடுமையாக நடந்து கொள்கிறார். அவர் தேர்தலில் சொல்லி வாக்கு பெற்றதைத் தான் செய்கிறார்.
ஆனாலும் அவரால் பேசாமல் இருக்க முடியவில்லை. ட்விட்டரில் எழுதாமலும் இருக்க முடியவில்லை. மீடியாக்களுக்கு சரியான தீனியாக அவரது கருத்துக்கள் அமைந்து விடுகிறது.
மீடியாவில் சொல்வதைப் போல் எல்லாம் மோசமான நிலை இல்லை. ஒபாமாவைப் போல் ட்ரம்பும் சட்டத்திற்கு உட்பட்டுத் தான் செயல்பட முடியும்.
மெக்சிகோவுக்கு இடையே சுவர் கட்டுவேன் என்கிறார். ஏற்கனவே மெக்சிகோ பார்டரில் கம்பி தடுப்பு, சுவர்கள் இருக்கின்றன. பார்டர் செக்யூரிட்டியினரின் சேவை சிறப்பாகவே இருக்கிறது.
சுவர் என்பது வெறும் அடையாளமாகத் தான் இருக்குமே ஒழிய, அதனால் எந்த பெரிய மாற்றமும் ஏறபடப் போவதில்லை.
சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய ஒருத்தரை நாடுகடத்த வேண்டுமென்றால், கிட்டத்தட்ட 12 ஆயிரத்து ஐநூறு டாலர்கள் தேவைப்படும்.மேலும் குடியுரிமை நீதிமன்றத்தில் வழக்கு முடிந்து தீர்ப்பு வருவதற்குள் 3 வருடங்கள் கூட ஆகலாம்.
வழக்கு முடிந்து தீர்ப்பு வந்த பிறகு தான் வெளியேற்ற முடியும். சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டுமென்றால், கூடுதல் நீதிமன்றம், நீதிபதிகள் வேண்டும். அதெல்லாம் நடைமுறை சாத்தியம் இல்லாதது ஆகும்.
சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய குற்றவாளிகளை, அமெரிக்காவில் குற்றம் செய்பவர்களை நாடு கடத்துவதில் ஒபாமாவுக்கும் ட்ரம்புக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. முந்தைய அதிபர்கள் புஷ்ஷும், க்ளிண்டனும் கூட இதே அணுகுமுறையைத் தான் பின்பற்றினார்கள்.
ஆகவே ட்ரம்பின் ஆட்சியில் குடியுரிமை விவகாரத்தைப் பொறுத்தவரை தலைகீழான மாற்றங்கள் ஏதும் இல்லை. ஆறு நாடுகள் தடை கூட, ஏற்கனவே ஒபாமா ஆட்சியில் அமலில் இருந்ததை ஒட்டியே விதிக்கப்பட்டுள்ளது
ட்ரம்பின் அதிகமான பேச்சுக்களும் அவை மீடியாவில் வெளியாகும் விதமும், நிஜத்தை வேறுவிதமாக பிரதிபலிக்கின்றன.
நாட்கள் செல்லச் செல்ல, ட்ரம்பும் ,ஒபாமாவின் பிந்தைய காலத்தைப் போல் மென்மையான போக்கை கடைப்பிடிப்பார் என்று எதிர்ப்பார்க்கலாம் என்று கூறினார்.
அடையாள அட்டையை வைத்திருங்கள்
கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,, குடியுரிமை விவகாரத்தில் ஒரு வித அச்ச உணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வதாக கூரிய கேரி, க்ரீனகார்டு, குடியுரிமை அட்டை உள்ளிட்டவைகளின் ஜெராக்ஸ் காப்பி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.
உள்ளூர் காவல்துறை அதிகாரிகள், வழியில் நிறுத்தி கேட்க நேர்ந்தால், குடியுரிமை அடையாள அட்டை காப்பி உதவியாக இருக்கும்.
ஹெச். 1 விசா குறித்த கேள்விக்கு, அதிக அளவில் பணம் புரளும் ஹெச் 1 விசாக்களை பிஸினஸ்மேன் ட்ரம்ப் நிறுத்த மாட்டார் என்று நம்புவதாக கூறினார்.
மேலும் நம்முடைய தனிப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் முறையான ஹெச்1 பி விசா அனுமதி பெற்றிருப்பவர்களை , விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி நாட்டுக்கு திருப்பி அனுப்ப வாய்ப்பே இல்லை என்றார்.
முறையான அனுமதியுடன் விசா, உரிய நிறுவனத்தில் வேலை மற்றும் எந்த குற்ற பின்னணியும் இல்லாதவர்களுக்கு, அமெரிக்காவிற்குள் வரும் போது எந்த சிக்கலும் ஏற்பட வாய்ப்பில்லை, கவலைப் பட தேவையில்லை என்றும் கூறினார்.
நிகழ்ச்சியில் அருண் வரவேற்புரை ஆற்றினார். புரவலர் பால்பாண்டியன்கேரிக்கு நினைவுப்பரிசை வழங்கினார். மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்க தலைவர் கால்டுவெல் நன்றியுரை கூறினார்.கிருஷ்ணராஜ் தொகுத்து வழங்கினார்.
-இர தினகர்