அதுக்கெல்லாம் பயப்பட மாட்டேன்.. "பிச்சை பாத்திரம்" ஏந்தி நாடு நாடாக போறாரே ஷெபாஸ்.. இம்ரான்கான் நறுக்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை விமர்சித்துள்ளார் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பிச்சை பாத்திரத்தை ஏந்தி கொண்டு, உலகம் முழுவதும் சுற்றி வருகிறார் என்று முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
ஆட்சியில் இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி, இந்தியாவை புகழ்வதை விடாமல் செய்து கொண்டிருக்கிறார் பாகிஸ்தான் நாட்டின் இம்ரான்கான்.
கடுமையான பொருளாதார நெருக்கடியை பாகிஸ்தான் சந்தித்து வந்த நிலையில், என்னென்னவோ திட்டங்களை, அறிவிப்புகளை அன்று இம்ரான் கான் மேற்கொண்டும், நிலைமையை சீரமைக்க முடியவில்லை..
இருளில் மூழ்கிய பாகிஸ்தான்.. திடீரென துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. 12 மணி நேரம் ஆகுமாம்.. என்னாச்சு?
தொல்லைகள்
சரியாக அரசாங்கத்தை வழிநடத்தவில்லை என்பதால், இம்ரான்கான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அந்த நாட்டு மக்களும், எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்த நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, இம்ரான் கான் அரசு கவிழ்க்கப்பட்டது.. இம்ரான்கான் வெளியேற்றப்பட்டாலும்கூட, அவருக்கு எதிராக காய்நகர்த்தல்கள் நடந்து கொண்டே இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகிறார்கள்..
துளைத்த குண்டு
கைநழுவி போன பிரதமர் பதவியை, எப்படியாவது மீட்டு, பாகிஸ்தானை காப்பாற்றுவேன் என்று பிரச்சாரத்தையும் கையில் எடுத்துள்ளார் இம்ரான்கான்.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பேரணி ஒன்றில் கலந்து கொண்ட இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், அவரது வலது காலில் குண்டு பாய்ந்தது.. எனினும் இம்ரான் கான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்றாலும், தன்னை அரசியலில் இருந்து விரட்டியடிக்க முயற்சிகள் நடந்து வருவதாக இம்ரான் கான் தெரிவித்து வருகிறார்..
பயப்படமாட்டேன்
இங்கிலாந்து நாட்டின் 'தி நியூஸ் இன்டர்நேஷனல்' என்ற செய்தி நிறுவனத்திற்கு இம்ரான்கான் அளித்த பேட்டியில், "பொதுத் தேர்தலுக்கு முன்னதாக என்னை அரசியலில் இருந்து விரட்டியடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. அதற்காக ஆளும் கூட்டணி அரசு தீவிர முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக என் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் புதுபுது கேஸ்கள் என்மீது பதிவு செய்து வருகிறார்கள்.. ஆனால் இதுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். என்னை அரசியலில் இருந்து வெளியேற்ற அவர்களால் எந்த வழக்கும் போட முடியவில்லை'' என்றார்.
பாத்திரமேந்தி
அரசியல் நகர்வு இப்படி இருந்தாலும், கொரோனா, பெருவெள்ளம் என அடுத்தடுத்த இயற்கை சீற்றங்களால் அந்நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் தொங்கி கொண்டிருக்கிறது.. அதனால்தான், கடந்த ஆகஸ்ட் மாதம், ஐஎம்எப் என்று சொல்லக்கூடிய சர்வதேச நாணய நிதியத்திடம், 170 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் நிதியுதவியை பாகிஸ்தான் கோரியிருந்தது.. பொருளாதார நெருக்கடியை தீர்க்க சர்வதேச நாணய நிதியம் தேவையான நிதியை விடுவிக்க உதவ வேண்டும் என்று அமெரிக்காவிடமும் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்திருந்தது.
பிச்சை பாத்திரம்
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், எகிப்தில் நடந்த பருவநிலை மாநாட்டில் பங்கேற்று திரும்பிய நிலையில், தன்னுடைய அண்ணன் நவாஸ் ஷெரீப்பை சந்திக்க லண்டனுக்கு சென்றார்.. அங்கே சில அரசு சார்ந்த கூட்டங்களிலும் பங்கேற்றதுடன், நிதி உதவி கோரி ஐக்கிய அரபு அமீரக பயணமும் மேற்கொண்டார்... இதைதான், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடுமையாக விமர்சித்துள்ளார்..
பிச்சை பாத்திரம்
செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த அரசு, பாகிஸ்தானுக்கு என்ன செய்கிறது என்று நீங்களே பாருங்கள்... பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பிச்சை பாத்திரம் ஏந்திக்கொண்டு, நாடு நாடாக, சுற்றுப்பயணம் சென்றுகொண்டிருக்கிறார்.. ஆனால், ஒருத்தரும் அவருக்கு ஒரு பைசாகூட, (பென்னி நாணயம்) கூட வழங்கவில்லை.. இந்தியாவிடம்கூட பேச்சுவார்த்தைக்காக கெஞ்சி கொண்டு இருக்கிறார்... ஆனால், "முதலில், பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுங்கள்.. அதுக்கு அப்பறம், பேச்சுவார்த்தை பற்றி பரிசீலிக்கலாம்" என்று டெல்லி தரப்பு அவரிடம் சொல்லியுள்ளது" என்று தெரிவித்துள்ளார் இம்ரான்.
நல்லுறவு
இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கான தன்னுடைய விருப்பங்களை ஐக்கிய அரபு அமீரக ஊடக நிறுவனத்துக்கு தந்த பேட்டியின்போது, வெளிப்படுத்தியிருந்தார் பிரதமர் ஷெரீப்.. அப்போது இதுகுறித்து இந்தியா தரப்பில் சொல்லும்போது, "அண்டை நாடான பாகிஸ்தானுடன் நல்லுறவையே எப்போதும் இந்தியா விரும்புகிறது... ஆனால், அதுபோன்ற உறவுக்கு, பயங்கரவாதம் மற்றும் வன்முறை ஆகியவற்றில் இருந்து விடுவிக்கப்பட்ட சூழல் அந்நாட்டில் காணப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.