என்னாது சசிகலா நடிகையா?... 11 பேர் கொண்ட குழுவ போடுங்க இம்ரான் கான்!
சசிகலா, ஜெயலலிதா குறித்து தவறான தகவல்களை டுவிட்டரில் போட்டு வம்பில் மாட்டிக் கொண்டுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் வீரர் இம்ரான் கான்.
Recommended Video
இஸ்லாமாபாத்: சசிகலா ஒரு தென்னிந்திய நடிகை என்றும் அவர் அண்மையில் உயிரிழந்துவிட்டார் என்றும் தவறான டுவீட்டுகளை போட்டுவிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் வீரர் இம்ரான் கான் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பாகிஸ்தான் தேரீக்-இ-இன்சாஃப் என்ற அரசியல் அமைப்பின் தலைவராக உள்ளவர் இம்ரான் கான். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் வீரர் ஆவார். இவர் இந்திய அரசியலை பற்றியே தெரியாமல் ஒரு டுவீட் போட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா குறித்து டுவீட்
இம்ரான் கான் தனது டுவீட்டில் இந்தியாவின் தமிழகத்தின் நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்த சசிகலா அண்மையில் இறந்துவிட்டார். அவரது வீட்டில் இருந்து கட்டுக் கட்டாக பணம், கட்டி கட்டியாக தங்கம், தங்க நகைகள் என பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார். மேலும் வறியவர்களிடம் இருந்து கொள்ளையடித்து பதுக்கி வைக்கப்படும் பொருள்கள் இப்படிதான் போகும் என்று ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஒரு மெசேைஜயும் தெரிவித்துள்ளார்.
ஆனால் தகவல் தவறாச்சே
ஊழல் அரசியல்வாதிகளுக்கு அறிவுரை எல்லாம் சரிதான். ஆனால் இவர் ஜெயலலிதாவின் பேரை குறிப்பிடுவதற்கு பதில் சசிகலா பெயரை தவறாக குறிப்பிட்டு விட்டாரோ என்று பார்த்தால், இவர் கூறிய அனைத்து தகவல்களும் தவறாகவே உள்ளன.
இறக்கவும் இல்லை
சசிகலா ஒரு நடிகை என்று கூறியுள்ளது தவறு. அவர் நடிகை இல்லை. ஜெயலலிதாவுக்கு உதவியாளராக இருந்தவர். தற்போது சிறையில் உயிருடன் இருக்கிறார். சரி ஜெயலலிதாவோ என்று நினைத்தால் அவர் இறந்து ஓராண்டு முடிந்துள்ள நிலையில் அண்மையில் இறந்தார் என்று பதிவிட்டுள்ளார்.
அவரும் இல்லை
நடிகை சசிகலாவை கூறியிருப்பாரோ என்று பார்த்தால் அவர் பாலிவுட் நடிகை, தென்னிந்திய நடிகை அல்ல. கடைசியாக போயஸ் கார்டனில் இருந்து பாதாள அறையில் நகை, பணம், தங்க கட்டிகள் பறிமுதல் என்று பதிவிட்டுள்ளார். இதுகுறித்து வருமான வரித் துறையே தெளிவாக கூறிவிட்டது.
வருமான வரி துறை என்ன கூறியது
போயஸ் கார்டனில் உள்ள சசிகலா மற்றும் ஜெ.வின் செயலாளர் புகழேந்தி ஆகியோர் தங்கியிருந்த அறைகளில் மட்டுமே வருமான வரி சோதனை நடத்தப்பட்டது என்றும் ஜெயலலிதா அறையில் எந்த சோதனையும் நடத்தவில்லை என்றும் அதிகாரிகள் சோதனையின்போது தெளிவுப்படுத்திவிட்டனர். இதனால் இம்ரான் கானின் இந்த தகவலும் பொய்யாகிவிட்டது.
ஜாக்கிரதையாக கையாள வேண்டாமா
இதுபோல் இந்திய அரசியல் குறித்து எந்த ஒரு உண்மை தகவலையும் தெரிந்து கொள்ளாமல் வாய்க்கு வந்தபடி டுவீட் போட்டுள்ளது, இம்ரான் கானின் அரைவேக்காட்டுத்தனம் இல்லாமல் வேறென்ன சொல்வது. இதுபோல் அவசர கோலத்தில் டுவீட் போட்டுவிட்டு தனது தகவல்கள் தவறு என்றவுடன் அந்த டுவீட்டை அழித்துவிட்டுள்ளார். டுவிட்டர் பதிவை அழித்து என்ன பிரயோஜனம் இம்ரான் கான், அதான் உங்க டுவீட்டை ஊடகங்கள் ஸ்க்ரீன் ஷாட் எடுத்துவிட்டனவே.