ஆளில்லா விமானங்களை வாங்கிக் குவிக்கும் இந்தியா! உலகத்திலேயே முதலிடம்!!
டெல்லி: ஆளில்லா விமானங்களை இறக்குமதி செய்வதில் உலகிலேயே இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது என்கின்றன புள்ளிவிவரங்கள்..
நிலநடுக்கம் புரட்டிப் போட்ட நேபாளத்தில் மீட்புப் பணிகளை இந்தியா மேற்கொண்டு வருவதில் ஆளில்லா விமானங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக அளவில் 1985 முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இந்தியாதான் அதிக அளவிலான ஆளில்லா விமானங்களை இறக்குமதி செய்துள்ளது என்கிறது இந்தியா ஸ்பென்ட் இணையதளம்.
இது தொடர்பாக அந்த இணைய தளம் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
1,574 ஆளில்லா விமானங்கள்
1985-2014ஆம் ஆண்டு காலத்தில் உலகம் முழுவதும் மொத்தம் 1,574 ஆளில்லா விமானங்கள் கைமாறியுள்ளன. இதில் ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்கள் 16.
1985-90ஆம் ஆண்டுகளில் 185, 1990-94 ஆம் ஆண்டுகாலத்தில் 164, 1995-99ஆம் ஆண்டுகளில் 192, 2000-04ஆம் ஆண்டுகளில் 272, 2005-09ஆம் ஆண்டு காலத்தில் 322, 2010-14ஆம் ஆண்டுகாலத்தில் 439 ஆளில்லா விமானங்கள் கைமாறியிருக்கின்றன. இதில் 2005-09 காலத்தில் 5 ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களும் 2010-14ஆம் ஆண்டு காலத்தில் 11 ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களும் கைமாறியிருக்கிறது.
இந்தியா முதலிடம்
உலக அளவில் இந்தியாதான் அதிக ஆளில்லா விமானங்களை வாங்கியுள்ளது. 2வது இடத்தில் இங்கிலாந்தும் மூன்றாவது இடத்தில் பிரான்சும் 4வது இடத்தில் எகிப்து, 5வது இடத்தில் இத்தாலியும் உள்ளன.
1988ல் கொள்முதல்..
இந்தியாவைப் பொறுத்தவரையில் 1998ஆம் ஆண்டுதான் முதன் முதலாக ஆளில்லா விமானம் வாங்கப்பட்டது. இதை கொடுத்தது இஸ்ரேல். ஆனால் இங்கிலாந்தோ 1972ஆம் ஆண்டே கனடாவில் இருந்து ஆளில்லா விமானத்தை இறக்குமதி செய்துவிட்டது.
அதற்கு முன்னர் 1968ஆம் ஆண்டு அமெரிக்காவிடம் இருந்து ஜப்பான் ஆளில்லா விமானத்தை இறக்குமதி செய்தது. உலகத்திலேயே ஆளில்லா விமானத்தை முதலில் இறக்குமதி செய்த நாடு ஜப்பான் தான்.
இஸ்ரேலிடம் இருந்துதான்..
இந்தியா இறக்குமதி செய்துள்ள பெரும்பாலான ஆளில்லா விமானங்கள் இஸ்ரேலிடம் இருந்து வாங்கப்பட்டவையே. உலக அளவில் இத்தகைய விமானங்களை ஏற்றுமதி செய்வதில் இஸ்ரேலின் பங்கு 60.7%. அதற்கு அடுத்த இடம் அமெரிக்கா, 3வது இடத்தில் கனடா.
1980ஆம் ஆண்டில் இருந்து இஸ்ரேல் 783 ஆளில்லா விமானங்களை விற்பனை செய்துள்ளது. இதற்கடுத்ததாக கனடா 450, அமெரிக்கா 413 ஆளில்லா விமானங்களை விற்பனை செய்திருக்கிறது.
இஸ்ரேல், இத்தாலி, தென்னாப்பிரிக்கா ஆகியநாடுகள் ஆளில்லா விமானங்களை ரகசியமாக சில நாடுகளுக்கு விற்பனை செய்தும் இருக்கின்றன.
சீனா
2014ஆம் ஆண்டு சீனா மிக அதிக அளவிலான ஆளில்லா விமானங்களை நைஜீரியாவுக்கு அனுப்பியிருந்தது.
இந்திய ஆளில்லா விமானங்கள்
இந்தியாவைப் பொறுத்தவரையில் 2013ஆம் ஆண்டு உத்தர்காண்ட் வெள்ளத்தின் போது மீட்புப் பணிகளில் நேத்ரா ஆளில்லா விமானம் பயன்படுத்தப்பட்டது. அதேபோல் குஜராத்தின் பூஜ் வெள்ளத்தின் போது நேத்ரா ஆளில்லா விமானம் பயன்படுத்தப்பட்டது.
மேலும் நிஷாந்த், பஞ்சி, ருஸ்டோம், அவுரா, லக்ஷயா என பெயரிடப்பட்ட ஆளில்லா விமானங்களை இந்தியா பயன்படுத்துகிறது. இவைகளில் ருஸ்டோம், அவுரா 30 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.