அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக் கொன்ற 16 வயது கொள்ளையன்
நியூயார்க்: அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இந்தியர் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் 16 வயது சிறுவனும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் வசித்து வந்தவர் இந்தியரான மானவ் தேசி. 30களில் இருக்கும் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரும், அவரது வருங்கால மனைவியும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கரோலினாவில் இருந்து புளோரிடா மாநிலத்திற்கு வந்துள்ளனர்.
புளோரிடாவின் புனித அகஸ்டின் பகுதியில் உள்ள பலசரக்கு கடையில் கிளார்க்காக மானவ் வேலை பார்த்து வந்தார். நேற்று 16 வயது சிறுவன் முகத்தில் கைக்குட்டையை கட்டிக் கொண்டு கடைக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றார்.
இதை பார்த்த மானவ் அவரை தடுக்க முயன்றபோது சிறுவன் அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் மானவ் சம்பவ இடத்திலேயே பலியானார். தப்பியோடிய சிறுவன் மற்றும் அவரது நண்பரை போலீசார் விரட்டிச் சென்று கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த மானவின் பெற்றோர் இந்தியாவில் இருந்து புளோரிடாவுக்கு கிளம்பிச் சென்றுள்ளனர். முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் கனக்டிகட் மாநிலத்தில் கேஸ் நிலையத்தில் பணிபுரிந்த 39 வயது சஞ்சய் பட்டேல் 2 கொள்ளையர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.