'பாஸ்' மகள் மீது வெறித்தனமான கள்ளக்காதல்: நாடு கடத்தப்படும் இந்திய வம்சாவளி என்ஜினியர்
சிட்னி: ஆஸ்திரேலியாவில் தனது முதலாளியின் மகளை பின்தொடர்ந்த இந்திய வம்சாவளி என்ஜினியருக்கு ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் அவர் நாடு கடத்தப்பட உள்ளார்.
ஆஸ்திரேலியாவின் க்வீன்ஸ்லேண்ட் மாநிலத்தில் உள்ள கிளாட்ஸ்டோனில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளி என்ஜினியரான அபினவ் சிங்(33). கனடா நாட்டு பாஸ்போர்ட் வைத்துள்ள அவர் தற்காலிக விசாவில் ஆஸ்திரேலியா வந்துள்ளார். அவரது மனைவி ஒரு டாக்டர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அபினவுக்கு தன்னுடன் பணிபுரியும் தனது முதலாளியின் மகள் மீது கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அந்த பெண்ணுக்கு கடந்த ஜூலை மாதம் 14ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி வரை எஸ்.எம்.எஸ்., இமெயில் மூலம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். அந்த பெண்ணுக்கு அபினவ் மீது காதல் ஏற்படவில்லை. அதனால் அவர் அபினவை கண்டுகொள்ளவும் இல்லை.
இருப்பினும் அபினவ் அந்த பெண்ணை விடாமல் துரத்தி காதலை தெரிவித்து வந்துள்ளார். அவரது வீட்டிற்கே சென்று காதல் விவகாரம் பற்றி அந்த பெண்ணின் தந்தையுடன் சண்டை போட்டுள்ளார். இதையடுத்து அந்த பெண் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அபினவோ, நான் அவரை காதலிக்கிறேன். அவருக்கு என் மீது காதல் இல்லை என்று கூறட்டும் நான் விட்டுவிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் அபினவை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கிளாட்ஸ்டோன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அபினவுக்கு ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் அவரை நாடு கடத்தவும் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் அபினவ் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.