அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் நியமனம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் 19வது சர்ஜன் ஜெனரலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரல் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தியின்(37) பெயரை அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமா பரிந்துரை செய்தார். இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் விவேக் மூர்த்திக்கு ஆதரவாக 51 பேரும், எதிராக 43 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து விவேக் அமெரிக்காவின் 19வது சர்ஜன் ஜெனரலாக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

அமெரிக்க சர்ஜன் ஜெனரலாக பொறுப்பேற்றுள்ள முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் விவேக் தான். மேலும் இந்த பதவியை ஏற்றுக் கொண்டுள்ள மிகவும் இளம் வயது டாக்டரும் விவேக் மூர்த்தி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மூர்த்தியின் பெற்றோர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இங்கிலாந்தில் பிறந்த மூர்த்தி 3 வயதாக இருக்கையிலேயே பெற்றோருடன் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்திற்கு வந்துவிட்டார். அமெரிக்காவில் வளர்ந்த அவர் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஏல் ஸ்கூல் ஆப் மெடிசினில் படித்து டாக்டர் ஆனார். மேலும் ஏல் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ.வும் படித்துள்ளார்.
சர்ஜன் ஜெனரல் என்றால் அவர் புகைப்பிடித்தல், உடற்பயிற்சி உள்ளிட்ட சுகாதார விஷயங்கள் பற்றி பேசும் நாட்டின் தலைமை செய்தித் தொடர்பாளர். ஒபாமா பல்வேறு உயரிய பதவிகளுக்கு இந்திய அமெரிக்கர்களை பரிந்துரை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications