இஸ்ரேலை சீண்டி.. அமெரிக்காவை டென்ஷனாக்கிய ஈரான் அதிபர்! யார் இந்த மசூத் பெசெஷ்கியன்?
தெஹ்ரான்: அணுசக்தி செயல்பாட்டை கைவிடவில்லை என்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. அதேநேரம், அணுசக்தி விஷயம் தொடர்பாக அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சவார்த்தையை ஈரான் அதிபர் மேற்கொண்டு வந்தார். இந்த சமயத்தில் இஸ்ரேல் அவசரப்பட்டதால், அமெரிக்காவால் இப்போது நடக்கும் போருக்கு உள்ளேயும் நுழைய முடியவில்லை. இப்படி இரண்டு தரப்பையும் அசால்ட்டாக டீல் செய்தவர்தான் அதிபர் மசூத் பெசெஷ்கியன். யார் இவர்? இப்போரில் அவரது பங்கு எப்படி உள்ளது என்பதை விரிவாக பார்ப்போம்.
அடிப்படையில் மசூத், ஓர் மருத்துவர், இதய சிகிச்சை நிபுணர். 2001-2005 காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த இவர், 2008-2024 காலத்தில் பலமுறை அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு உறுப்பினராக தேர்வாகியுள்ளார். இந்த காலத்தில் அவர் நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராகவும் இருந்திருக்கிறார். இவரது அரசியல் பயணம் இதுதான்.

ஆனால் மற்றொரு வகையிலும் மசூத் பிரபலமாக அறியப்படுகிறார். அதாவது, இவர் மருத்துவராக இருந்தாலும் கூட போர் முனையில் வீரராக செயல்பட்டிருக்கிறார். ஈரானின் புரட்சிக்கு முந்தைய காலத்தில், கட்டாய ராணுவ சேவையை இவர் செய்தார். இதுதான் இவரை மருத்துவராக வேண்டும் என்று உந்தி தள்ளியது. அப்போது இவருக்கு வயது 19. பின்னாட்களில் நினைத்தபடி தப்ரிஸ் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பயின்று டாக்டர் பட்டம் பெற்று மருத்துவராகிவிட்டார்.
அப்போதுதான் ஈரான்-ஈராக் போர் தொடங்கியது. இது 1980 முதல் 1988 வரை நீடித்தது. ஏற்கெனவே ராணுவ பயிற்சி பெற்றிருந்ததாலும், மருத்துவராக பட்டம் பெற்றிருந்ததாலும், இந்த போரில் மருத்துவ சேவையை வழங்கும் பணிக்கு இவர் நியமிக்கப்பட்டார். வெறுமென அடிப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் பணியை இவர் செய்யவில்லை. இவர் மருத்துவ குழுக்களின் தலைவராக பணியாற்றினார். அதாவது எங்கெல்லாம் மருத்துவ உதவிகள் தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் மருத்துவர்களை அனுப்பி வைத்தார். இது அவரது தலைமைப்பண்பை செதுக்கியது.
இத்துடன் நிற்காமல் துப்பாக்கியை கையில் ஏந்தி போர் வீரராகவும் செயல்பட்டார். இந்த அனுபவம் அவருக்கு மூன்று விஷயங்களை கற்றுக்கொடுத்தது. போராடுவது, மீண்டு எழுவது, மீண்டும் போராடுவது.
இந்த அனுபவத்தின் பின்னணியில்தான் மசூத், அரசியலுக்குள் நுழைந்தார். கடந்த ஆண்டு அப்போது அதிபராக இருந்த 'இப்ராஹிம் ரைசி' ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்ததை தொடர்ந்து, மசூத் தேர்தலில் போட்டியிட்டு தற்போது ஈரானின் 9வது அதிபராக இருக்கிறார். தன்னை ஓர் சீர்திருத்தவாதி என்றும், நடுநிலைவாதி எனவும் சொல்லிக்கொள்ளும் இவர், அமெரிக்காவுடன் அணுசக்தி பேச்சுவார்த்தையை நடத்தினார்.
"ஈரான் மீது போடப்பட்டிருக்கும் அனைத்து பொருளாதார தடைகளையும் நான் நீக்குவேன். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்" என்று சொல்லிதான் தேர்தலில் போட்டியிட்டார். அதன் அடிப்படையில்தான் பேச்சுவார்த்தையையும் நடத்தினார். இதுவே இவரின் சிறப்பான வெளியுறவுத்துறை அணுகுமுறைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
அதாவது அமெரிக்காவை பகைத்துக்கொண்டு தொழில் செய்ய முடியாது. அதே நேரம், இஸ்ரேலின் பகையை தாங்கிக்கொள்ளவும் முடியாது. மூன்றாவது விஷயம் ஈரானின் சொந்த அணுசக்தி வளர்ச்சியை விட்டுக்கொடுக்கவும் கூடாது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு, அமெரிக்காவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அமெரிக்கா வந்தது. பேச்சுவார்த்தை நடந்தது.. நடந்தது.. நடந்துக்கொண்டே இருந்தது. எல்லா வகையிலும், பேச்சுவார்த்தையை மசூத் இழுக்கடித்தார்.
பொறுத்து பார்த்த அமெரிக்கா, இஸ்ரேலை தூண்டிவிட்டிருக்கிறது. இதன் மூலம் ஈரான் தனது ஒப்பந்த வலையில் விழும் என்று அமெரிக்கா எதிர்பார்த்தது. ஆனால், ஸ்கெட்ச் ஈரானுக்கு கிடையாது, இஸ்ரேலுக்கு என்பதை இப்போது அமெரிக்கா புரிந்துக்கொண்டிருக்கும்.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் செய்த அட்டூழியத்தை பொருக்க முடியவில்லை. ஆனால், முதலில் ஈரான் தாக்குதலை நடத்தினால் அது சர்வதேச அளவில் அந்நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். இஸ்ரேல் போரை தொடங்கி வைக்காதா? என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில்தான், அதேபோல நடந்து இருக்கிறது.
பதில் தாக்குதல் நடத்துவதால் ஈரானுக்கு உலக நாடுகளின் சப்போர்ட் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரம் இஸ்ரேலையும் பழிவாங்கியாச்சு, அமெரிக்காவுக்கும் இந்த பஞ்சாயத்தில் நுழைய முடியாது. இப்போது இருக்கும் நோக்கம் எல்லாம் ஒன்னுதான். ஈரானின் அணுசக்தி பயன்பாட்டை சர்வதேச ஒப்புதலுடன் மேம்படுத்துவது. இதை நோக்கி அந்நாட்டை மசூத் நகர்த்தி வருகிறார்.
போர், மருத்துவர் அனுபவம் ஆகியவைதான் இவரை சிறந்த வியூக வகுப்பாளராகவும், தலைமைப்பண்மை கொண்டவராகவும் மாற்றியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications