சத்தமின்றி யுரேனியத்தை வெளியே எடுத்த ஈரான்! அமெரிக்கா தாக்குதலுக்கு முன்பே எல்லாம் ஓவர்! பகீர் படங்கள்
தெஹ்ரான்: ஈரானின் ஃபோர்டோவ் அணுஉலையில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் மோதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இந்த தாக்குதலால் அங்கிருந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் அழிக்கப்பட்டு இருக்கும் என்றே அமெரிக்கா தரப்பு கூறுகிறது. ஆனால், சாட்டிலைட் படங்களை ஆய்வு செய்ததில் சில பகீர் முடிவுகள் தெரிய வந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இஸ்ரேல் ஈரான் மோதலில் நேற்றைய தினம் அமெரிக்கா நேரடியாகத் தலையிட்டது. ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவின் இந்த தாக்குதல் ஃபோர்டோவ் அணுஉலையில் உள்ள யுரேனியம் செறிவூட்டுதல் மையத்தைப் பாதித்திருக்கலாம் என்றே கூறப்படுகிறது.

சாட்டிலைட் போட்டோ
இது தொடர்பான சாட்டிலைட் படங்களிலும் அழிவு ஏற்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. இது தொடர்பாக முன்னாள் ஐ.நா. அணு ஆயுத ஆய்வாளர் டேவிட் ஆல்பிரைட் கூறுகையில், "அவர்கள் இந்த மாபெரும் ஆலையை வெடிகுண்டுகள் மூலம் துளைத்துவிட்டார்கள். அந்த மையம் முற்றிலுமாக அழிந்திருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்" என்றார்.
அதேநேரம் பூமிக்கு அடியில் ஏற்பட்ட அழிவை உறுதிப்படுத்த முடியவில்லை என்கிறார் செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்வதில் நிபுணத்துவம் பெற்ற டெக்கர் ஈவ்லேத். நூற்றுக்கணக்கான செறிவூட்டும் கருவிகள் மிகவும் ஆழமாகப் புதைந்துள்ளதால், செயற்கைக்கோள் படங்களை வைத்து சேதத்தின் அளவை மதிப்பிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஈரான் திட்டம்
இதுபோல எப்படியும் தாக்குதல்கள் நடக்கும் என்பதை முன்கூட்டியே கணித்த ஈரான், அதில் இருந்து தற்காத்துக் கொள்ளவே, தனது அணுசக்தி திட்டத்தின் பெரும்பகுதியை ஆழமான நிலத்தடி தளங்களில் ஃபோர்டோவ் மலையின் பக்கவாட்டில் பாதுகாப்பாகப் புதைத்து வைத்திருந்தது. அதை அழிக்கவே அமெரிக்கா தனது அதிநவீன பங்கர் பஸ்டர் பாமை பயன்படுத்தியது.
இந்த தாக்குதல் மூலம் ஈரானின் அணு ஆயுத திட்டத்தை நிறுத்தியுள்ளதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறியுள்ளன. ஆனால் தனது மையமும் ஆபரேஷனும் இன்னும் செயல்பாட்டிலேயே இருப்பதாகவும் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றே ஈரான் கூறுகிறது.
யுரேனியத்தை வெளியே எடுத்த ஈரான்
அதேநேரம் வல்லுநர்கள் வேறு சில பாயிண்டுகளையும் முன்வைக்கிறார்கள். அதாவது அமெரிக்கா இதுபோன்ற தாக்குதலை நடத்தும் என்பதை ஈரான் முன்கூட்டியே கணித்திருக்கும் என்பதே அவர்கள் வாதம். இதனால் ஃபோர்டோவ்வில் இருந்த ஆயுதத் தரம் வாய்ந்த யுரேனியத்தின் பெரும்பகுதியை ஈரான் முன்கூட்டியே வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியிருக்கலாம் என்கிறார்கள். இதற்காக இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐ.நா. அமைப்பிற்குக் கூட தெரியாத இடங்களில் ஈரான் யுரேனியத்தை பதுக்கியிருக்கும் என்பதே அவர்கள் வாதம்.
நடமாட்டம் இருக்கு
ஏனென்றால் அதிநவீன மாக்ஸர் சாட்டிலைட் படங்களை ஆய்வு செய்தால் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஃபோர்டோவ்வில் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் நடந்தது தெளிவாகத் தெரிகிறது. மேலும், அந்த இரு நாட்களும் ஆலையின் வெளியே நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்ததும் தெளிவாகத் தெரிகிறது. இதை வைத்தே அமெரிக்காவின் தாக்குதலுக்கு முன்பே 60% செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் வெளியேற்றி இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இது தொடர்பாக வல்லுநர் ஜெஃப்ரி லூயிஸ் கூறுகையில், "அவர்களின் அணுசக்தி திட்டத்தை அழிப்பது கடினம். இந்த தாக்குதல் மூலம் சில ஆண்டுகள் அதை பின்னுக்குத் தள்ளலாம்.. அவ்வளவு தான்! வேறு எதையும் உறுதியாகச் செய்ய முடியாது. நமக்குத் தெரியாத ஆலைகள் நிச்சயம் ஈரான் வசம் இருக்கும்" என்றார்.
அதாவது அமெரிக்காவின் தாக்குதலைக் கணித்து ஈரான், முன்கூட்டியே யுரேனியத்தை அங்கிருந்து அகற்றி இருக்கும் என்பதே வல்லுநர்கள் ஒரு தரப்பினரின் கணிப்பாக இருக்கும்.!












Click it and Unblock the Notifications