ஓபனிங் வேணா அமெரிக்காவா இருக்கலாம்.. ஆனா, எண்ட் கார்டு நாங்க தான் போடுவோம்! பயம் காட்டும் ஈரான்!
டெஹ்ரான்: இஸ்ரேல் ஈரான் இடையேயான போரில் அமெரிக்கா தலையிட்டு இருப்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் தலையீட்டுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் கடும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேலும் பதிலடி கொடுத்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா போரை தொடங்கி இருந்தாலும், அதனை நாங்கள் தான் முடிவுக்கு கொண்டு வருவோம் என அமெரிக்காவுக்கு ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் மீது இஸ்ரேல் அத்துமீறி தாக்குதல் நடத்திய நிலையில் பதிலடியாக சனிக்கிழமை முதல் தற்போது வரை ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது, பாலிஸ்டிக், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தாக்குதல் நடத்தினால் பதிலடி கடுமையாக இருக்கும் என ஈரான் எச்சரித்த நிலையில், கடந்த வாரம் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் இஸ்ரேல் மீது எதிர்பார்த்ததை விட கடுமையான பதிலடி ஈரான் கொடுத்து வருகிறது.

இரு தரப்பும் மிகக் கோரமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரானில் உள்ள ராணுவ தளங்களை இஸ்ரேல் தாக்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் நாட்டின் மிக முக்கிய ராணுவ தளங்களில் ஒன்றான கெர்மன்ஷா ராணுவ தளத்தை இஸ்ரேல் ராணுவம் திங்கள் அன்று வெற்றிகரமாக தாக்கியதாக கூறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஹமேடன் மற்றும் தெஹ்ரான் பகுதிகளில் உள்ள ராணுவ தளங்கள் மீதும் 30க்கும் மேற்பட்ட வெடிபொருட்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
உளவுத்துறை அளித்த நம்பகத்தன்மையான தகவலின் படி இந்த தாக்குதலில் 20 இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் ஈடுபட்டதாகவும், ஈரானின் ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், ஏவுதளங்கள், வான்வழி கண்காணிப்புக்கு பயன்படும் ரேடார், செயற்கைக்கோள் அமைப்புகள், வான்வழி ஏவுகணை தளம் ஆகியவை குறி வைத்து தாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இஸ்ரேல் மக்களை பாதுகாப்பதற்காக ஈரானின் ராணுவ திறன்களை குறைக்கும் வகையில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக இஸ்ரேல் கூறியிருக்கிறது.
மறுபுறம் ஈரான் தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் அதிநவீன ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இஸ்ரேல் முழுவதும் அபாய ஒலி ஒலிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது ஈரான்.
இது தொடர்பாக பேசி உள்ள ஈரான் ஆயுதப் படையின் செய்தி தொடர்பாளரான இப்ராஹிம் சோல்ஃபாகாரி அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி இருக்கும் நிலையில் கடுமையான விளைவுகளை சந்திக்கப் போகிறது. அந்நாட்டின் நடவடிக்கை ஈரான் ஆயுதப்படைகளுக்கான இலக்குகளை தீவிரமாக விரிவுபடுத்தி இருக்கிறது. தான் செய்த செயலுக்கு அமெரிக்கா கடுமையான விளைவுகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு சூதாட்டக்காரர். அவர் போரை தொடங்கியிருந்தாலும், ஈரான் நாட்டின் ராணுவத்தினரான நாங்கள் அதை முடிவுக்கு கொண்டு வருவோம்" என கூறி இருக்கிறார்.
நாளுக்கு நாள் இரு நாடுகள் இடையேயான மோதல் தீவிரமாகி வரும் நிலையில் போரினால் இருநாட்டு மக்களுமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையிலான தாக்குதலில் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், பத்தாயிரம் மக்கள் காயம் அடைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் லட்சக்கணக்கானோர் உணவு, குடிநீரின்றி கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.












Click it and Unblock the Notifications