"இஸ்ரேல் சர்வ நாசம்.." கொக்கரிக்கும் ஈரான்.. இடையில் அமெரிக்காவுக்கு பறந்த வார்னிங்! என்ன நடக்கிறது
டெல் அவிவ்: இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வரும் நிலையில், அவர்கள் அமெரிக்காவுக்குப் பரபர வார்னிங் ஒன்றை விடுத்துள்ளனர்.
மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த சில காலமாகவே பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது. காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் தொடங்கிய போர் பல மாதங்களாகத் தொடர்ந்து வருகிறது.

இந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும் என்று யாருக்கும் தெரியவில்லை. இதற்கிடையே மத்திய கிழக்குப் பகுதியில் இப்போது அடுத்த மோதல் வெடித்துள்ளது.
ஈரான்: சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் கடந்த சில நாட்களுக்குத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் ராணுவ தளபதி உட்பட சிலர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் இருந்து அமெரிக்கா ஒதுங்கி இருக்க வேண்டும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விரித்திருக்கும் வலையில் விழ வேண்டாம் என்று ஈரான் அதிபரின் அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தலைவர் முகமது ஜம்ஷிடி அமெரிக்காவை எச்சரித்துள்ளார். இந்த விவகாரத்தில் அமெரிக்கா பாதிக்கப்படக்கூடாது என்றால் அவர்கள் விலகியே இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்து இருக்கிறார். அப்படி அமெரிக்கா இந்த விவகாரத்தில் விலகி இருந்தால் ஈரான் படைகள் அமெரிக்க இலக்குகளைத் தாக்காது என்றும் ஜம்ஷிடி தெரிவித்தார்.
அமெரிக்கா: ஈரான் அனுப்பியதாகக் கூறப்படும் இந்த கடிதம் குறித்து அமெரிக்கா இதுவரை எந்தவொரு கருத்தையும் கூறவில்லை. இருப்பினும், அமெரிக்கா மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், இப்பகுதியில் இஸ்ரேல் அல்லது அமெரிக்க இலக்குகளை ஈரான் தாக்கினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இஸ்ரேல் நாட்டில் உள்ள ராணுவம் அல்லது உளவுத்துறை இலக்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அமெரிக்காவுக்கு உளவுத் துறை தகவல் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்கக் கடந்த வாரம் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அமெரிக்கா நேரடியாக ஈரானிடம் கூறியுள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவுவதால் இதுபோல நேரடியாக ஈரானுக்கு அமெரிக்கா எந்தவொரு தகவலையும் அனுப்பாது. ஆனால், அங்கே இருக்கும் தனது சொந்த படைகள் மற்றும் தளங்கள் தாக்கப்படுவதைத் தடுக்கவே அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுவே முதல்முறை: கடந்த வாரம் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் இரண்டு ஜெனரல்கள் உட்படக் குறைந்தது ஏழு ஈரானியர்கள் கொல்லப்பட்டனர். கடந்த சில மாதங்களாகவே சிரியாவில் இருக்கும் ஈரான் தொடர்புடைய இடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருக்கும் போதிலும், ஈரான் தூதரக கட்டிடம் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
இந்தத் தாக்குதலை நடத்திய உடனேயே இஸ்ரேல் உச்சக்கட்ட அலர்ட் மோடிற்கு போய்விட்டது. தனது வீரர்களின் விடுமுறையை ரத்து செய்த இஸ்ரேல், உடனடியாக அனைத்து வீரர்களையும் பணிக்குத் திரும்புமாறு அழைத்தது. மேலும், ராக்கெட் அல்லது டிரோன் மூலம் தாக்குதல் நடத்த முடியாத வகையில் ஜிபிஎஸ் சிக்னல்களையும் ஆஃப் செய்து வைத்துள்ளது.
வெடிக்கும் மோதல்: இருப்பினும், இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதலுக்குத் தக்க பதிலடி தரப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ரெடியாகி வருகிறார்கள். இஸ்ரேலுடனான எந்தவொரு போருக்கும் ஹிஸ்புல்லா முற்றிலும் தயாராக உள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் அறிவித்துள்ளார். இதனால் அப்பகுதியில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications