செவ்வாயில் துருவக் கரடி இருக்கா... ‘கரடி’ விடுதா நாசா?
நியூயார்க்: செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்து வருவதாகவும், ஆனால் அதனை நாசா மறைப்பதாகவும் வேற்றுகிரகவாசிகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
செவ்வாய் கிரகம் குறித்து சர்வதேச அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கியூரியாசிட்டி ரோவர், அவ்வப்போது செவ்வாய்கிரகத்தின் புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது.
அந்தப் புகைப்படங்களை வேற்றுகிரகங்களைக் குறித்து ஆய்வு செய்து வரும் நிறுவனங்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றன.

நண்டு, பெண்...
அந்த ஆராய்ச்சிகளின் படி, செவ்வாய்கிரகத்தில் பெண் உருவம் தெரிவதாகவும், நண்டு, பிரமிடு, ஸ்பூன், புத்தர் சிலை என பல்வேறு உருவங்கள் தெரிவதாகவும் கூறுவதுண்டு.

துருவக்கரடி...
அந்தவகையில் தற்போது செவ்வாய் கிரகத்தில் துருவக்கரடி இருப்பதாக நாசா வெளியிட்ட புகைப்படங்களின் அடிப்படையில் வேற்றுகிரகத்தைக் குறித்து ஆராய்ந்து வரும் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தெளிவான புகைப்படம்...
ரோமங்களுடன் உள்ள இந்த துருவக் கரடி நிழலுடன் தெளிவாக தெரிவதாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.

நாசா மறைக்கிறது...
இது தொடர்பாக வேற்று கிரகவாசிகள் இருப்பதாக ஆணித்தரமாக நம்பும் அந்த இணையதளத்தின் செய்தி ஆசிரியர் ஸ்காட் சி வாரிங் கூறுகையில், ‘நாசா திட்டமிட்டு நமக்கெல்லாம் செவ்வாய் கிரகம் பற்றிய உண்மையான விவரங்கள் தெரியக்கூடாது என்பதற்காகவே, கருப்பு வெள்ளைப் புகைப்படங்களை வெளியிடுகிறது' எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

விசாரணை தேவை...
மேலும், தங்களது இந்தக் கண்டுபிடிப்பு குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கி மூன்னுக்கும் விவரங்களை அனுப்ப இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

செவ்வாயில் தண்ணீர்...
சமீபத்தில் தான் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications