இந்திய-அமெரிக்க தாக்குதல் அச்சம்: ஆப்கானிஸ்தான் எல்லைக்கு இடம் மாறிய தாவூத் இப்ராகிம்
இஸ்லாமாபாத்: இந்திய, அமெரிக்க தேடுதல் வேட்டைக்கு பயந்து, நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமை, ஆப்கானிஸ்தான் எல்லையில் யாருக்கும் தெரியாத ரகசிய இடத்தில் தங்க வைத்துள்ளது பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.
இந்தியாவால் தேடப்பட்டு வரும் நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானின் கராச்சியில் தங்கியிருந்தபடி, போதை மருந்து கடத்தல் மூலம் பணம் சம்பாதித்து வந்தார்.
அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க பல ஆண்டுகாலமாக இந்திய அரசு விடுத்த கோரிக்கைகளை பாகிஸ்தான் மதிக்கவில்லை. இதனிடையே அமெரிக்காவிடம் நட்புறவை வளர்த்துவரும் தற்போதைய மத்திய அரசு, உளவு, பாதுகாப்பு விஷயங்களில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட துவங்கியுள்ளது.

இதனால் பின்லேடனை யாருக்கும் தெரியாமல் பாகிஸ்தானுக்குள் புகுந்து அமெரிக்க வீரர்கள் கொன்றதை போல, தாவூத்துக்கும் ஆபத்து வரலாம் என்று அஞ்சுகிறது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு. இதையடுத்து சில தினங்களாக தாவூத்தை ரகசிய இடத்துக்கு மாற்றிவிட்டது ஐஎஸ்ஐ. அநேகமாக அவர் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையிலுள்ள ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கலாம் என்று இந்திய உளவுத்துறை சந்தேகிக்கிறது.
தாவூத்தின் நடமாட்டத்தை மிக உன்னிப்பாக கவனித்து வரும் இந்திய உளவுத்துறைக்கு, கடந்த சில நாட்களாக தாவூத் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. இதற்கு காரணம், அவர் தனக்கு மிகவும் நெருக்கமாக உள்ளோரிடம் கூட பேசாமல் இருப்பதுதான் என்கிறது உளவுத்துறை வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications