லண்டன் சுரங்க ரயில் வெடிகுண்டு தாக்குதல்... ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு!
லண்டனில் நேற்று நடந்த சுரங்க ரயில் வெடிகுண்டு சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பெய்ரட் : லண்டனில் சுரங்க ரயில் நிலையத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தாங்கள் தான் காரணம் என்று பொறுப்பேற்றுள்ளன.
லண்டனின் பார்சன்ஸ் சுரங்க நிலையத்தில் ரயில் நேற்று திடீரென வெடிகுண்டு ஒன்று வெடித்தது. சுரங்க ரயிலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர்ப்பலி எதுவும் இல்லை. எனினும் இந்த வெடிகுண்டு தாக்குதலில் 29 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நடந்த சம்பவம் குறித்து ரயிலில் பயணித்தவர்கள் கூறுகையில் "மேற்கு லண்டனில் இருந்து பார்சன்ஸ் கிரீன் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்து நின்ற போது, பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் ஒரு தீப் பந்து உருண்டு வந்து விழுந்தது. அப்போது தான் அது பக்கெட் பாம் என்பதை உணர்ந்தோம்" என்கின்றனர்.
ஐஇடி வெடிகுண்டு தாக்குதல்
இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு தீவிரவாதிகள் ஐஇடி குண்டை பயன்படுத்தியுள்ளனர். இந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐந்தாவது தாக்குதல்
லண்டனில் கடந்த மார்ச் முதல் நடத்தப்பட்ட ஐந்தாவது பயங்கரவாத தாக்குதல் இதுவாகும். பிரக்சிட் வெளியேற்ற முடிவுக்குப் பிறகு பிரதமராக தெரசா மே பொறுப்பேற்றது முதல் லண்டனில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
ஆறுதல் கூறிய தெரசா மே
இந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்து பிரதமர் தெரசா மே தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு என் பிரார்த்தனைகள் உடனிருக்கும். அவசர சிகிச்சைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று பதிவிட்டுள்ளார்.
நெருக்கடி நிலையில் லண்டன்
இதனிடையே சுரங்க ரயில் வெடிகுண்டு தாக்குதலையடுத்து தெரசா மே அவசரமாக லண்டன் திரும்பியுள்ளார் தீவிரவாத தாக்குதல்கள் குறித்து அவர் உயர்அதிகாரிகளுடன் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இது கோழைத்தனமான தாக்குதல் என்றும் லண்டனில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் அதிக அளவில் என்ற எல்லையைத் தாண்டி நெருக்கடி நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு
தொடர் தீவிரவாத தாக்குதல்களால் லண்டன் மக்கள் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று சுரங்க ரயிலில் நடந்த பக்கெட் பாம் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.