"அட்டாச்ட்" பெட்ரூமுடன் கூடிய சுரங்கப் பாதை.. அச்சுறுத்தும் ஐஎஸ்ஐஎஸ்!
பாக்தாத்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு நினைத்ததை விட மிகப் பெரிய விருட்சமாக வளர்ந்து நிற்கிறது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். சமீபத்தில் அவர்களின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட ஈராக் நகரம் ஒன்றில் அவர்கள் அமைத்திருந்த சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சுரங்கப் பாதையில் செய்யப்பட்டிருந்த வசதிகள்தான் பாதுகாப்புப் படையினரை அதிர வைத்து விட்டது.
அனைத்து வசதிகளுடன் கூடியதாக அந்த சுரங்கப் பாதை அமைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 40 சுரங்கப் பாதைகளை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். சிஞ்சார் என்ற நகரில்தான் இந்த அளவுக்கு திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர் தீவிரவாதிகள்.
குர்திஷ் படையினர் இந்த நகரை தற்போது கைப்பற்றியுள்ளனர். அவர்கள்தான் இந்த சுரங்கப் பாதைகளையும் கண்டுபிடித்துள்ளனர். பல நூறு மீட்டர் தூரத்திற்கு இந்த சுரங்கப் பாதைகள் செல்கின்றன. வீடுகளில் ஆரம்பித்து வீடுகளிலேயே முடிவது போல இதைக் கட்டியுள்ளனர்.
பக்கா வசதிகளுடன்
இந்த சுரங்கப் பாதைகளை வெறும் ரகசியப் பாதை என்று கூறி முடித்து விட முடியாது. காரணம் அங்கு அத்தனை வசதிகளையும் பக்காவாக செய்துள்ளனர் தீவிரவாதிகள்.
பெட்ரூம் - மின்சார வசதி
இந்த சுரங்கப் பாதையில் ஆங்காங்கே படுத்துத் தூங்குவதற்கான சிறு சிறு அறைகளை உருவாக்கியுள்ளனர். மின்சார வசதி முழுமையாக செய்யப்பட்டுள்ளது. மண் மூடைகள் அடுக்க வைக்கப்பட்டுள்ளன. வெடிகுண்டுகளைத் தயாரிப்பதற்குத் தேவையான அமெரிக்காவைச் சேர்ந்த அதி நவீன கருவிகள் உள்ளன. மருந்துகள் உள்ளன. குரான் புத்தகங்களும் இங்கு உள்ளன.
ஒரு வருடத்தில்
சிஞ்சார் நகரமானது கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக தீவிரவாதிகள் கையில் இருந்தது. இந்த காலகட்டத்தில்தான் இதை உருவாக்கியுள்ளனர். இந்த மாதத் தொடக்கத்தில் இந்த நகரம் குர்திஷ் படையினரின் வசமானது.
ஒருங்கிணைப்பு
இதுகுறித்து குர்திஷ் படையின் கமாண்டரான ஷாமோ எடோ கூறுகையில் 30 முதல் 40 சுரங்கப் பாதைகளைக் கண்டுபிடித்துள்ளோம். இவை ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டுள்ளன. விமானத் தாக்குதலிலிருந்து தப்பிக்கவும், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஓடவும் இதை பயன்படுத்தியுள்ளனர். ஆயுதங்களைப் பதுக்கி வைக்கவும் இதைப் பயன்படுத்தியுள்ளனர்.
2014ல்
சிஞ்சார் நகரத்தை தீவிரவாதிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறைபிடித்தனர். மேலும் அந்த நகரில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான யாஸிதி இனத்தவரையும் சிறை பிடித்து படுகொலை செய்தனர் என்பது நினைவிருக்கலாம்.