மக்கள் கொந்தளிப்பால் கனத்த மவுனம் கலைத்த ஈரான்.. இஸ்ரேலை கதறவிட்ட நூற்றுக்கணக்கான ஏவுகணைகள்!
டெஹ்ரான்: ஈரானுக்குள் நுழைந்து ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டது முதல் லெபனானில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா படுகொலை வரையிலான இஸ்ரேலின் தாக்குதல் வேட்டையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருந்த ஈரான் இப்போது உக்கிரமான பதிலடித் தாக்குதலை தொடங்கி இருக்கிறது. இஸ்ரேல் மீது 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை சரமாரியாக வீசி ஈரான் நடத்தி வரும் தாக்குதல் உலக நாடுகளை அலற வைத்துள்ளது.
லெபனானில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழு மீதான தாக்குதலில் அதன் தலைவர் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டார். பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தினரை அழித்ததில் தொடங்கி ஹிஸ்புல்லா மீதான தொடர் தாக்குதல், ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா படுகொலை என அத்தனை சம்பவங்களிலும் ஈரான் கனத்த மவுனம் காத்தது.

இத்தனைக்கும் ஹமாஸ், ஹிஸ்புல்லா இரண்டுமே ஈரான் உருவாக்கிய ஆயுதக் குழுக்கள். ஈரான் பெற்றெடுத்த ஆயுதக் குழுக்கள். பாலஸ்தீனத்தைத் தொடர்ந்து லெபனானிலும் ரத்த வெள்ளத்தை ஏற்படுத்திய போதும் ஈரான் பெரும் அமைதி காத்தது. ஈரான் அரசு தரப்பும் சரி, ஈரான் புரட்சிப் படையும் சரி எந்த ஒரு எச்சரிக்கையும் விடுக்காமல், இஸ்ரேல் எங்களை போருக்குள் இழுத்துவிடுகிறது என ஒதுங்கியே இருந்தது ஈரான்.
ஆனால் ஈரானியர்கள் அமைதி காக்கவில்லை. ஈரான் முழுவதும் அசாதாரணமான சூழ்நிலை உருவானது. ஈரானில் இஸ்ரேலின் கொட்டத்தை அடக்கக் கோரி போராட்டங்கள் வெடித்தன. இதனால் வேறுவழியே இல்லாமல் இப்போது ஈரான், இஸ்ரேலை வதம் செய்யத் தொடங்கி இருக்கிறது.
ஏற்கனவே சிரியா தலைநகரில் ஈரான் தூதரகம் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடியாக பதிலடி தந்தது ஈரான். தற்போது லெபனானின் ஹிஸ்புல்லாக்கள் மீதான கொடூரத் தாக்குதல்களுக்கு சரமாரியான பதிலடி கொடுத்து வருகிறது ஈரான்.
ஈரான் திடீரென நடத்திய இந்தத் தாக்குதல் உலக நாடுகளை அலற வைத்துள்ளது. அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனத்தில் இருந்து உலக நாடுகள், ஈரானின் ஆவேசத்தின் போக்கு எங்கே போய் முடியும் என்பதை உணர்ந்துதான் அலறிக் கொண்டிருக்கின்றன. அதுவும் லெபனானுக்குள் தரைவழியாக நுழைந்தும் தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் கொக்கரித்த நிலையில்தான் ஈரான் சரமாரியான பதிலடியை தொடங்கி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications