ஈரக்குலையே நடுங்குதே.. இஸ்ரேலுக்கு ஊடுருவி மக்களை குறிவைத்து சுட்ட ஹமாஸ் தீவிரவாதிகள்.. ஷாக் வீடியோ
இஸ்ரேல்: இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் உருவாகி உள்ளது. இந்நிலையில் தான் இஸ்ரேலுக்குள் கார், பராசூட் உதவியுடன் நுழைந்த ஹமாஸ் தீவிரவாதிகள் குருவியை சுடுவது போல் மக்களை துப்பாக்கியால் சுடும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் உள்ளது. ஒருகாலத்தில் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேல் வசம் இருந்தது. தற்போது அது பாலஸ்தீனத்தில் உள்ள நிலையில் ஹமாஸ் அமைப்பினர் காசா பகுதியை நிர்வகித்து வருகின்றனர்.

இதனால் காசா பகுதிக்குள் இஸ்ரேலால் நுழைய முடியாத நிலை உள்ளது. இத்தகைய சூழலில் தான் காசாவை கைப்பற்ற இஸ்ரேல் முயற்சிக்கிறது. இதற்கு ஹமாஸ் அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கிறது.
இதனால் தான் ஹமாஸ் அமைப்பை தீவிரவாத அமைப்பாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அதோடு பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இன்று காலையில் மோதல் போராக உருவாகி உள்ளது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது வெறும் 20 நிமிடங்களில் 5,000 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தினர்.
மேலும் ஹமாஸ் தீவிரவாதிகள் பாரசூட் மற்றும் கார்களில் தெற்கு இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். அங்கு அவர்கள் சாலைகளில் கார்கள், ஜீப்பில் செல்வதோடு துப்பாக்கியுடன் ஊர்வலம் போல் செல்கின்றனர். மேலும் எதிரே வரும் வாகனம் மற்றும் மக்களை நோக்கி அவர்கள் குருவியை சுடுவது போல் சுட்டு வருகின்றனர். இதிலும் சிலர் இறந்துள்ளதாகவும், சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் சர்வதேச அளவில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் வழக்கறிஞர்கள் ஆர்சன் ஆஸ்ட்ரோவ்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், ‛‛காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் ஊடுருவிய பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாதிகள் காரில் இருந்து ஸ்டெரோட்டில் வசிப்பவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய காட்சி இதுதான்'' என குறிப்பிட்டுள்ளார்.
Just surreal! Footage of Palestinian Hamas terrorists who infiltrated into Israel from Gaza, firing at residents in Sderot from an SUV. pic.twitter.com/ffUO5XwG1I
— Arsen Ostrovsky (@Ostrov_A) October 7, 2023
தற்போதைய சூழலில் ஹமாஸ் தீவிரவாதிகளின் ஏவுகணை தாக்குதல், துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல்வேறு வகையான தாக்குதலில் இதுவரை 40க்கும் அதிகமான இஸ்ரேல் மக்கள் இறந்த நிலையில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தீவிரவாதிகளின் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இஸ்ரேலும் போர் தொடங்கி உள்ளதாக கூறி பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகள் பதுங்கி உள்ள இடத்தில் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன்மூலம் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் மூண்டுள்ளது.












Click it and Unblock the Notifications