ஈரான் மீது குண்டு மழை.. மீண்டும் ஃபோர்டோவ்வை குறிவைத்த இஸ்ரேல்.! உலக போர் வெடிக்குமா?
தெஹ்ரான்: ஈரான் நாட்டின் அணு சக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நேற்று தான் தாக்குதல் நடத்தியிருந்தது. இது சர்வதேச அளவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்துவதாக இருந்தது. இந்தத் தாக்குதல் நடந்து ஒரு நாள் கூட நிறைவடையாத நிலையில், மீண்டும் அதே அணு சக்தி நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாகவே மோதல் தொடர்ந்தது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. ஆனால், நேற்று அமெரிக்கா இந்த மோதலில் உள்ளே வந்தது. இஸ்ரேலின் மூன்று அணு ஆலைகள் மீது அமெரிக்கா மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது. இது நிலைமையை மோசமாக்கியது.

மீண்டும் தாக்குதல்
இதற்கிடையே ஈரான் மீது இப்போது மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது. குறிப்பாக ஈரானின் ஃபோர்டோவ் அணு உலை மீது மீண்டும் தாக்குதல் நடத்தியது. இது குறித்த தகவல்களை ஈரான் அரசு ஊடகம் செய்தியாக வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் ஆதரவு முழுமையாக இருப்பதால் ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஈரானின் ராணுவ உள்கட்டமைப்பைக் குறிவைத்து இஸ்ரேல் தீவிரமான தாக்குதலை நடத்தியுள்ளது.
அமெரிக்க விமானப்படை GBU-57 "பங்கர் பஸ்டர்" வெடிகுண்டுகள் மற்றும் டோமஹாக் ஏவுகணைகள் மூலம் ஃபோர்டோவ் அணு உலை, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹானில் உள்ள அணு ஆலைகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை தாக்கின. இந்த தாக்குதல் நடந்து ஒரு நாள் கூட நிறைவடையாத நிலையில், இஸ்ரேல் மீண்டும் இந்த தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
அமெரிக்கா
ஃபோர்டோவ் அணு உலைக்கு யுரேனியத்தை விரைவாகச் செறிவூட்டும் திறன் இருக்கிறது. இந்த ஃபோர்டோவ் அணு உலை பூமிக்கு அடியில் 80 முதல் 90 மீட்டர் கீழே அமைந்துள்ளது. இந்த ஆலையை அழிக்கத் தேவையான வெடிமருந்துகள் இஸ்ரேலிடம் இல்லை. இந்தளவுக்கு ஆழத்திற்குச் சென்று வெடிக்கும் திறன் கொண்ட குண்டு அமெரிக்காவிடம் மட்டுமே இருந்தது.
இதன் காரணமாகவே அமெரிக்கா நேற்று இங்குத் தாக்குதலை நடத்தியது. அதேநேரம் அமெரிக்காவின் இந்த "ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறித்து இன்னும் துல்லியமான தகவல்கள் கிடைக்கவில்லை. இருப்பினும், ஃபோர்டோவின் நிலத்தடி பகுதிகளில் குறிப்பிடத்தக்கச் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் குண்டு மழை
அமெரிக்காவின் இந்தத் தாக்குதலால் அணு கசிவு ஏற்படுமோ என்று அஞ்சப்பட்டது. இருப்பினும், இப்போது வரை அணு கசிவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் மிகவும் பாதுகாப்பாகவே எல்லாம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தான் ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
ஈரான் நாட்டின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது. ஈரானில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்றே இஸ்ரேல் கூறுகிறது. அங்கு அதிகாரம் அனைத்தும் கமேனியிடம் குவிந்துள்ள நிலையில், ஆட்சி மாற்றத்தை இஸ்ரேல் வலியுறுத்துகிறது. கமேனியை கொல்லும் திட்டமும் கூட இஸ்ரேலிடம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
சாட்டிலைட் போட்டோ
இதற்கிடையில் கடந்த வார சாட்டிலைட் படங்களில் தாக்குதலுக்கு முன்னரே ஈரான் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஃபோர்டோவிலிருந்து வெளியேற்றி இருக்கலாம் என்கிறார்கள் வல்லுநர்கள். ஏனென்றால் அந்த சாட்டிலைட் படங்களில் பல வாகனங்கள் மையத்திற்கே வெளியே வரிசையில் நிற்பது தெளிவாகத் தெரிந்தது. இதனால் தாக்குதலுக்கு முன்பே யுரேனியத்தை ஈரான் வேறு இடத்திற்கு மாற்றியிருக்கலாம் என்றும் வல்லுநர்கள் கூறுகிறார்கள்..












Click it and Unblock the Notifications