இதுதான் இஸ்ரேல் ஸ்டைல்.. ஏவுகணை கூட தேவையில்லை.. வெறும் ஸ்பீக்கரை வைத்து நடத்தும் "உளவியல்" போர்!
டெல் அவிவ்: இஸ்ரேலைச் சுற்றிக் கடந்த ஓராண்டிற்கு மேலாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த மோதல்களில் இஸ்ரேல் ராணுவம் ராணுவ வலிமையை மட்டுமின்றி உளவியல் தந்திரங்களையும் கூட பயன்படுத்துகிறது. அது என்ன உளவியல் தந்திரங்கள்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
காசா மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்து சுமார் 14 மாதங்கள் கடந்துவிட்டன. சுமார் 360 சதுர கிமீ பரப்பளவு மட்டுமே கொண்ட காசாவில் ஹமாஸை குறிவைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்துகிறது.

இஸ்ரேல்: இதனால் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால், சில நேரங்களில் பாதுகாப்பான பகுதிகளிலும் கூட ஹமாஸ் இருப்பதால் அங்கும் இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. சமீபத்தில் கூட காசாவின் அல்-மவாசியில் உள்ள மற்றொரு பாதுகாப்பான மண்டலத்தில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 20 பேர் கொல்லப்பட்ட நிலையில், பலர் காயமடைந்தனர்.
காசா மட்டுமின்றி, கடந்த சில மாதங்களாகவே லெபனானின் தலைநகர் பெய்ரூட் மற்றும் சிரியாவின் சில பகுதிகளிலும் கூட இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் ராணுவ பலம் குறித்து தனியாகச் சொல்லத் தேவையில்லை. மேற்குலக நாடுகளின் ஆதரவும் இருப்பதால், அதிநவீன ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது.
உளவியல் போர் தந்திரங்கள்: ஆனால் இதைத் தாண்டி இஸ்ரேல் ராணுவம் பல உளவியல் போர்த் தந்திரங்களையும் பயன்படுத்துகிறது. பொய்யான தகவல்கள், திட்டமிட்ட பிரச்சாரம் மற்றும் உளவியல் செயல்பாடுகள் (PsyOps) எனப் பலவற்றைச் சேர்த்து இஸ்ரேல் இந்த உளவியல் போர்த் தந்திரங்களைப் பின்பற்றுகிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளைக் குறிவைத்தே இந்த உளவியல் போர்த் தந்திரங்கள் மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது.
அதில் ஒன்று தான் ஸ்பீக்கர்களை கொண்ட ஒரு வகை ட்ரோன்கள். இந்த டிரோன்கள் காசா மீது பறக்கும் நிலையில், அதில் குழந்தைகளின் அழுகை, பெண்களின் அலறல் போன்ற சத்தங்கள் அதிக சத்தத்தில் ஒலிபரப்பப்படுகிறது.
அழுகை, அலறல்: இது தொடர்பாகக் காசா பகுதியினர் கூறுகையில், "நள்ளிரவு நேரங்களில் குழந்தைகளின் அழுகை அல்லது இளம்பெண்கள் கத்துவது போன்ற சத்தங்கள் கேட்கிறது. என்ன நடந்தது எனப் பார்க்க வெளியே வந்தால் இஸ்ரேல் ராணுவத்தின் டிரோன்கள் இருக்கும். ஹமாஸ் படையினரை வெளியே இழுக்க இந்தத் திட்டத்தை இஸ்ரேல் பயன்படுத்துகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகள் வெளியே வந்தால் அவர்கள் மீது இஸ்ரேல் ஸ்னைப்பர்கள் தாக்குதல் நடத்துவார்கள்..
இது மட்டுமின்றி போலியான துப்பாக்கிச் சூடு, வெடி குண்டு சத்தம், ராணுவ வாகனங்களின் நடமாட்டம் என எல்லா சத்தங்களும் இந்த டிரோனில் கேட்கும். சில சமயம் ஹீப்ரு மற்றும் அரபு மொழிகளில் பாடல்கள் கூட வரும். பொதுவாக மக்களைப் பயமுறுத்துவதற்கும் திசைதிருப்பவுமே இதைச் செய்கிறார்கள்" என்கிறார்கள். இஸ்ரேலின் இந்த தாக்குதல்களால் ஹமாஸ் மட்டுமின்றி அப்பாவி பொதுமக்களும் கூட கொல்லப்படுவதாகக் காசா தரப்பில் கூறப்படுகிறது.
அதீத ஒலி: அதேபோல அதிகளவில் ஒலியை ஏற்படுத்தும் ஏவுகணைகளையும் இஸ்ரேல் பயன்படுத்தி வருகிறது. குறைந்த உயரத்தில் பறக்கும் இந்த ஏவுகணைகள் அதீத ஒலியை ஏற்படுத்துகிறது. இது காசாவில் உள்ளவர்கள் மத்தியில் அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதை அங்குள்ள ஹமாஸ் படையினரை அச்சுறுத்த ஒரு கருவியாக இஸ்ரேல் பயன்படுத்துகிறது. மேலும், காசா பகுதிகளில் எச்சரிக்கை துண்டுப்பிரசுரங்களை வீசி செல்வது, ஹமாஸ் நடமாட்டத்தைக் கண்காணிக்கக் காடுகள், செடி கொடி இருந்தால் அவற்றை எரிப்பது உள்ளிட்ட செயல்களிலும் இஸ்ரேல் ஈடுபடுகிறது.
காசா மட்டுமின்றி லெபனானிலும் கூட இஸ்ரேல் இதுபோன்ற உளவியல் போர்த் தந்திரங்களைப் பயன்படுத்துகிறது. அமெரிக்காவின் எஃப் 15 ஜெட்கள் மூலம் லெபனானில் இஸ்ரேல் ரோந்து பணிகளைச் செய்கிறது. அப்போது மிகவும் தாழ்வாகப் பறந்த அதீத ஒலியை இஸ்ரேல் வேண்டும் என்றே ஏற்படுத்துகிறதாம். கடந்த ஜூன் மாதம் ஒலி கட்டுப்பாடுகளைத் தாண்டி அதீத சத்தத்தை இஸ்ரேல் ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
சைபர் தாக்குதல்: இது மட்டுமின்றி சைபர் தாக்குதலையும் இஸ்ரேல் குறிவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது லெபனான் மற்றும் பெய்ரூட்டில் உள்ள உள்ளூர் மக்களை இஸ்ரேல் ஹேக் செய்கிறது. அவர்களுக்கு திடீரென உள்ளூர் நம்பரில் இருந்து கால் வருமாம். அதை எடுத்தால் எச்சரிக்கை மெசேஜ்கள் பிளே ஆகுமாம். இதுபோல ஏகப்பட்ட உளவியல் தந்திரங்கள் மூலமாகவும் இஸ்ரேல் தொடர்ந்து போரிட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications