தேர்தலில் படுதோல்வி உறுதி.. ஜப்பானில் ஆட்சியை இழக்கும் வலதுசாரி கட்சி! கருத்துக்கணிப்பில் தகவல்
டோக்கியோ: ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேல் சபைக்கு இன்று தேர்தல் நடைபெற்றிருக்கிறது. ஆளும் வலதுசாரி கட்சியான 'லிபரல் டெமாக்ரடிக் கட்சி' தேர்தலில் பெரும்பான்மையை இழக்கக்கூடும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
லிபரல் டெமாக்ரடிக் கட்சி மற்றும் கோமெயிட்டோ கூட்டணி தற்போது ஆட்சியில் இருக்கிறது. பிரதமாக இஷிபா இருக்கிறார். இந்த கூட்டணி ஆட்சியை தக்க வைக்க வேண்டும் எனில், மேல்சபை தேர்தலில் 50 இடங்களை வெல்ல வேண்டும். ஆனால் கருத்துக்கணிப்புகள் 32 முதல் 51 இடங்கள் வரை மட்டுமே கிடைக்கும் என கூறுகின்றன. அந்நாட்டின் வேறு சில ஊடகங்கள், இந்த கூட்டணி 41-43 இடங்களை பெறலாம் என கணித்துள்ளன.

தேர்தல் முடிவுகளின் தாக்கம்
ஏற்கெனேவே கீழ் சபைக்கு நடந்த தேர்தலில் ஆளும் கூட்டணி தோல்வியடைந்திருக்கிறது. இதிலும் தோல்வியடைந்தால் அக்கட்சி, கடந்த 1999 க்குப் பிறகு சந்திக்கும் மிக மோசமான தோல்வியாக இது பார்க்கப்படும். என்னதான் தேர்தலில் தோற்றாலும் உடனே ஆட்சி கவிழாது. ஆனால் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து பொதுத் தேர்தலை நடத்த அழுத்தம் கொடுக்க வாய்ப்பு உள்ளது.
நுகர்வோர் பிரச்சினைகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல்
அரிசி, இதர உணவு பொருட்களின் விலை உயர்வு விலைவாசியை அதிகரித்திருக்கிறது. போதாத குறைக்கு அமெரிக்காவும் ஜப்பான் மீது வரியை வாரி இறைத்திருக்கிறது. இதெல்லாம் அந்நாட்டின் முக்கிய பிரச்சனையாக உள்ளது. எதிர்க்கட்சிகள் வரி குறைப்பையும் அதிக நலத்திட்ட செலவினங்களையும் வலியுறுத்தி வருகின்றன. இதிற்கிடையில்தான் தேர்தல் நடந்திருக்கிறது.
ஆளும் கட்சி தற்போது அமெரிக்காவுடன் பிரச்சனையில்லாத ஒப்பந்தத்தை செய்து முடிக்க முயன்று வருகிறது. இந்த நேரத்தில் தோல்வி என்பது ஜப்பானின் அரசியல் நிலைமையை சிக்கலாக்கக்கூடும்.
இந்த தேர்தலில் ஆளும் கட்சி தவறான விஷயத்தை கையில் எடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கன்சல்டிங் நிறுவனமான யூரேசியா குழுமத்தின் இயக்குனர் டேவிட் போலிங், இது குறித்து கூறுகையில், "இந்த தேர்தலில் ஆளும் கட்சி வாக்காளர் பிரச்சனையில் தவறான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. வீட்டு உபயோகப் பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க நுகர்வு வரியைக் குறைக்க பெரும்பாலான குடும்பங்கள் விரும்புகின்றன. ஆனால் ஆளும் கட்சி அதை எதிர்க்கிறது" என்றார்.
நிதி கட்டுப்பாடு மற்றும் முதலீட்டாளர்களின் கவலை
ஜப்பானின் மிகப்பெரிய கடன் சுமையை மறுநிதியளிக்கும் திறன் குறித்து முதலீட்டாளர்கள் கவலைப்படுகின்றனர். இதனால் அரசாங்க பத்திர சந்தை மோசமான நிலையில் உள்ளது. எனவே ஆளும் கட்சி, நிதி கட்டுப்பாட்டை வலியுறுத்துகிறது. உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடான ஜப்பான், ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட வேண்டும். தவறினால் அதன் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையில் கடுமையான வரிகளை எதிர்கொள்ள நேரிடும்.
இவ்வளவு நெருக்கடிகளுக்கு இடையில்தான் ஜப்பானில் தற்போது தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications