இந்திய பெண்ணின் இனத்தை பற்றி இழிவாகப் பேசிய லண்டன் நீதிபதி: ரூ.1 கோடி வேலை 'கோய்ந்தா'
லண்டன்: இங்கிலாந்தில் இந்தியாவைச் சேர்ந்த பெண்ணைப் பற்றி தரக்குறைவாக பேசிய நீதிபதி தனது வேலையை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள டெர்பிஷயரைச் சேர்ந்தவர் டெரன்ஸ் ஹாலிங்வொர்த். நீதிபதி. ஆண்டுக்கு சுமார் ரூ. 1 கோடி சம்பாதித்து வந்தார். இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த தீபா பட்டேல் என்பவரை அவரது முன்னாள் காதலர் கொடுமைப்படுத்திய வழக்கை டெரன்ஸ் விசாரித்து வந்தார்.
தீபா நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தால் தான் அவரது முன்னாள் காதலருக்கு தண்டனை அளிக்க முடியும் அதனால் அவரை அழைத்து வாருங்கள் என்று டெரன்ஸ் தெரிவித்தார். அதற்கு தீபாவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரெய்ச்சல் பார்க்கர் தீபா வேலையாக இருப்பார். அதனால் அவரை உடனே நீதிமன்றத்திற்கு வருமாறு கூற முடியுமா என தெரியவில்லை என்றார்.
இதை கேட்ட நீதிபதி கூறுகையில்,
அது ஒன்றும் பிரச்சனையாக இருக்காது. அவர் நீதிமன்றத்திற்கு வராத அளவுக்கு முக்கியமான வேலையில் இருக்க மாட்டார். ஏதாவது கடையில் வேலை செய்வார் என்றார்.
அப்படி என்றால் என்ன கூறுகிறீர்கள் என்று ரெய்ச்சல் கேட்டதற்கு நீதிபதி கூறுகையில், பட்டேல் என்ற பெயர், அவரது இனத்தின் பின்னணியை பார்த்தால் அவர் ஒன்றும் பெரிய முக்கியமான வேலையில் எல்லாம் இருக்க மாட்டார் என்றார்.
தீபாவின் இனத்தை பற்றி தரக்குறைவாக பேசிய டெரன்ஸ் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து டெரன்ஸ் மாவட்ட நீதிபதி பதவியில் இருந்து விலகினார். இருப்பினும் குடியேற்றத் துறை நீதிபதியாக தொடர்ந்து பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அந்த பதவியையும் அவரை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது நீதித்துறையில் எந்த பதவியிலும் இல்லை.