காபூல் அட்டாக்: துரிதமாக செயல்பட்ட இந்தியா: ஒரு நாள் முன்பு மட்டும் குண்டு வெடிப்பு நடந்திருந்தால்?
காபூல்: காபூல் விமான நிலையத்தில் நேற்று நடத்தப்பட்ட மிகப்பெரிய குண்டுவெடிப்பு தாக்குதலில் 90க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்தியா துரிதமாக செயல்பட்டு அங்கிருந்து பலரை மீட்டதால் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டு உள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின் முதல்முறையாக மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் இந்த காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. அமெரிக்க படைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குதலை அந்த அமைப்பு நடந்தி உள்ளது.
இந்த தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் பலியானார்கள். இந்த தாக்குதலில் உண்மையான பலி எண்ணிக்கை விவரம் இன்னும் வெளியாகவில்லை.

தாக்குதல்
இந்த காபூல் தாக்குதல் மொத்தம் 4 இடங்களில் நடைபெற்றது. அதில் இரண்டு தாக்குதல்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியே சில கிலோ மீட்டர் தொலைவில் நடைபெற்றது. மற்ற இரண்டு தாக்குதல்கள் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே அபே கேட் மற்றும் பரோன் ஹோட்டல் கேட் அருகே நிகழ்ந்துள்ளது. இதில் பரோன் ஹோட்டல் கேட் பகுதியில் வெளிநாட்டு மக்கள் பலர் விமானம் ஏறுவதற்காக காத்து இருந்தனர்.

குண்டுவெடிப்பு
இங்குதான் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டு 90க்கும் அதிகமான நபர்கள் பலியாகி உள்ளனர். நேற்று இரவு இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. சரியாக ஒருநாள் முன்பு, புதன் கிழமை இரவு அதே நேரத்தில் குண்டுவெடிப்பு நடந்த பரோன் ஹோட்டல் கேட் பகுதியில்தான் சீக்கியர்கள், ஹிந்துக்கள் பலர் காத்து இருந்தனர். இந்தியா ஏற்பாடு செய்திருந்த மீட்பு விமானத்தில் ஏறுவதற்காக அவர்கள் காத்து இருந்தனர். புதன் கிழமை இரவே அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

டெல்லி சீக்கிய குருத்வாரா
டெல்லி சீக்கிய குருத்வாரா அமைப்பின் உதவியோடு மத்திய அரசு விமானப்படை மூலம் 200க்கும் மேற்பட்டவர்களை புதன் கிழமை இரவே மீட்டது. புதன் கிழமை இவர்கள் லைனில் நின்ற அதே இடத்தில்தான் வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடந்து இருக்கிறது. ஒருநாள் மட்டும் தாமதம் ஆகி இருந்தால் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். இந்தியாவின் மீட்பு பணிக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டு இருக்கும்.
Recommended Video

அசம்பாவிதம்
ஆனால் இந்தியா துரிதமாக செயல்பட்டதால் அப்படி ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் காபூலில் இருந்து இந்திய விமானப்படை மூலம் மீட்கப்பட்ட சீக்கியர்களும், இந்துக்களும், ஆப்கானை சேர்ந்த இஸ்லாமியர்கள் சிலரும் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளனர். எங்களை இந்தியா துரிதமாக செயல்பட்டு மீட்டு இருக்கிறது, ஒருநாள் மட்டும் தாமதம் ஆகி இருந்தால் எங்கள் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு இருக்கும், இந்தியாவிற்கு நன்றி என்று மீட்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications