காபூலில் நேட்டோ படையினர் மீது தலிபான்கள் தற்கொலைப் படைத் தாக்குதல்... 3 பேர் காயம்
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேட்டோ ராணுவத்தினர் சென்ற வாகன வரிசை மீது தலிபான் தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 3 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்குத் தாங்கள்தான் காரணம் என்று தலிபான் அமைப்பினர் கூறியுள்ளனர்.
தலைநகர் காபூலில் உள்ள ஜாய் ஷிர் என்ற பகுதியில் நேட்டோ படையினரின் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது மார்க்கெட் ஒன்றிலிருந்து இந்தத் தாக்குதல் நடைபெற்றதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

ஒரு நபர் இதில் ஈடுபட்டார். ராணுவ வாகனங்களை நோக்கி காரில் சென்ற அவர் காரில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இந்த சம்பவத்தில் அந்த நபர் பலியானார். 3 பேர் காயமடைந்தனர் என்று காபூல் போலீஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் ரஹிமி தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் 2 ராணுவ வாகனங்கள், 4 மோட்டார் சைக்கிள்கள் கடுமையாக சேதமடைந்தன. மேலும் பொதுமக்களின் பல வாகனங்களும் சேதமடைந்தன.
நேட்டோ படையினருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்துத் தெரிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications