உயிர் பிரிந்த வேளையில் கதறிய குழந்தைகளின் கதறல் உங்களை தினசரி கொல்லும்.. மெஹர் தரார் குமுறல்
இஸ்லாமாபாத்: எனது நாடு வலியில் துடித்துக் கொண்டிருக்கிறது. கண்ணீரில் மிதக்கிறது என்று பாகிஸ்தானின் பெஷாவரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெஹர் தரார்.
இதுகுறித்து அவர் என்டிடிவி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள ஒரு மடலில் (open letter) தெரிவித்துள்ளதாவது:
"நான் எனது மகனை தினசரி காலை பள்ளிக்குக் கொண்டு சென்று விட்டு வருவேன்.
இதை கடந்த 13 வருடமாக செய்து வருகிறேன். இப்போது அவனுக்கு 15 வயதாகி விட்ட போதிலும் கூட நான் அதைத் தொடர்ந்து வருகிறேன்.
அவன் காரிலிருந்து புன்னகையுடன் கீழே இறங்கி பள்ளிக் செல்வதற்காக எத்தனிக்கும்போது நான் அவனுக்கு பறக்கும் முத்தம் கொடுத்து வழியனுப்புவேன். அவன் பள்ளிக்குள் நுழையும் வரை காத்திருப்பேன். அவன் பாதுகாப்பாக செல்கிறானா என்பதை அவனுக்குத் தெரியாமலேயே நான் உறுதி செய்து கொள்வேன்.
அவன் பாகி்ஸ்தானில் இருப்பதால் அவனது பாதுகாப்பு குறித்து நான் கவலைப்படவில்லை. மாறாக, என்னைப் பொறுத்தவரை, உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த பொக்கிஷம் அவன்தான் என்பதால். அவனைக் காக்க வேண்டியது எனத கடமை. அவன் மீண்டும் வீடு திரும்பும் வரை நான் பாதுகாப்பு குறித்த கவலையில்தான் இருப்பேன்.
ஆனால் இன்று எனது வயிற்றில் பெரும் குத்து விழுந்ததைப் போல துடித்துப் போயிருக்கிறேன். எனது இதயம், எனது ஆத்மா பெரிய இரும்புக் கம்பியால் அடிக்கப்பட்டதை போல உணர்கிறேன். பெஷாவர் ராணுப் பள்ளியில் பல குழந்தைகள் குரூரமாக கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டதும் எனது இதயமே நின்று போய் விட்டது.
குழந்தைகளை முகத்தில் சுட்டிருக்கிறார்கள், தலையில் சுட்டிருக்கிறார்கள், அவர்கள் உட்கார்ந்திருந்த டேபிள், சேர்களிலிருந்து இழுத்துச் சென்று சுட்டிருக்கிறார்கள். மிக மிக நெருக்கமாக சுட்டிருக்கிறார்கள். மிக மோசமான படுகொலை இது. ரத்தம் துடிக்கிறது.
தெஹ்ரிக் தலிபான் பாகிஸ்தான் என்ற பெயரிலான அவர்கள், ராணுவத்திற்கு எதிராக பழிவாங்குவதாக இதைச் சொல்லியிருக்கிறார்கள். ராணுவம் எங்களுக்குக் கொடுத்ததை நாங்கள் அவர்களுக்குக் கொடுத்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.
நான் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நீங்கள் உங்களை முஸ்லீம் என்று சொல்லிக் கொள்ளலாம், ஜிஹாதில் ஈடுபட்டுள்ளோம் என்று கூறிக் கொள்ளலாம், அல்லாவின் பாதையில் செல்வதாக கூறிக் கொள்ளலாம், ஆனால் அல்லா எதையெல்லாம் செய்யக் கூடாது என்று சொன்னாரோ அதை நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறீர்கள்.
அவரது பெயரால் பல குழந்தைகளைக் கொன்று குவித்துள்ளீர்கள். யாரெல்லாம் உங்களை எதுவுமே செய்யவில்லையோ அவர்களைக் கொன்றுள்ளீர்கள். நீங்கள் பாகிஸ்தானுக்கு மட்டும் எதிரி அல்ல, மாறாக உங்களுக்கும் நீங்களே எதிரிகளாகியுள்ளீர்கள்.
நீங்கள் தண்டிக்கப்படுவதற்கு முன்பு, ஏதாவது ஒரு ராணுவ வீரரின் புல்லட் உங்களைக் கொல்வதற்கு முன்பு, நீங்கள் பல ஆயிரம் முறை செத்துப் போவீர்கள். உயிர் பிரிந்த வேளையில் கதறிய குழந்தைகளின் கதறல் உங்களை தினசரி கொல்லும்.
குழந்தைகளை இழந்து பரிதவிக்கும் பெற்றோர்களின் கண்ணீர் உங்களைக் கொல்லும். நாட்டின் வலி உங்களைக் கொல்லும். நீங்கள் சாகும் வரை உங்களிடம் அமைதி இருக்காது" என்று கூறியுள்ளார் தரார்.
(மெஹர் தரார், பாகிஸ்தானின் டெய்லி டைம்ஸ் நாளிதழில் பணியாற்றியவர். இந்தியாவின் சசி தரூர் சர்ச்சையில் சிக்கியவர் என்பது நினைவிருக்கலாம்)