இந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் ‛மதரசா' மாணவர்கள்.. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஷாக் அறிவிப்பு
இஸ்லாமாபாத்: இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் தேவை ஏற்படும்போது மதரசா பள்ளிகளில் பயிலும் மாணவர்களை 2ம் கள வீரர்களாக களமிறக்குவோம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் என்பது உச்சம் தொட்டுள்ளது. கடந்த புதன்கிழமை முதல் இந்த மோதல் என்பது வலுத்து வருகிறது. ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் நாம் பந்தாடி வருகிறோம். இந்நிலையில் தான் இருநாடுகள் இடையேயான மோதல் என்பது இன்று உச்சம் தொட்டுள்ளது.

பாகிஸ்தான் நம்மை குறிவைத்து நடத்தும் தாக்குதலுக்கு ‛ஆபரேஷன் பன்யான் உல் மர்சூஸ்' என்று பெயர் வைத்துள்ளது. பாகிஸ்தான் நம் நாட்டின் 26 இடங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தியது. அது முறியடிக்கப்பட்டது.
இதற்கு நம் நாடு பதிலடி கொடுத்தது. ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நுர்கான், ஷார்காட்டில் உள்ள ரஃபிக்கி விமான தளம் மற்றும் சாக்வால் பகுதியில் உள்ள முரித் விமானதளங்கள் அழிக்கப்பட்டன. அதேபோல் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ட்ரோன் ஏவுதளமும் அழிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் கவாஜா ஆசிப் கூறுகையில், ‛‛எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. மதராசா பள்ளி மாணவர்களை 2ம் கள வீரர்களாக பயன்படுத்துவதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். மதரசாக்களில் இளைஞர்கள் படித்து வருகின்றனர். நேரம் வரும்போது அவர்களை 100 சதவீதம் பயன்படுத்தி கொள்வோம்'' என்றார்.
இதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அதாவது இந்தியாவை ஒப்பிடும்போது பாகிஸ்தான் முப்படைகளின் வலிமை பலவீனமாக உள்ளது. ராணுவம், விமானப்படை, கப்பற்படயைில் பாகிஸ்தானை விட நம் நாடு நவீன ஆயுதங்களையும், கூடுதல் வீரர்களையும் வைத்துள்ளது. புரியும்படி கூற வேண்டும் என்றால் நம் நாட்டில் தற்போது ராணுவத்தில் 12 லட்சத்து 37 ஆயிரம் பேர் உள்ளனர். கடற்படையில் 75,500 ஆயிரம் பேரும், விமானப்படையில் 1.50 லட்சம் பேரும் உள்ளனர். மொத்தமாக 14.7 லட்சம் உள்ளனர்.
ஆனால் பாகிஸ்தானை எடுத்து கொண்டால் ராணுவத்தில் 5 லட்சத்து 60 ஆயிரம் பேர், விமானப்படையில் 70 ஆயிரம் பேர், கடற்படையில் 30 ஆயிரம் பேர் என்று மொத்தம் 7 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். நம் நாட்டின் மொத்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை கூட பாகிஸ்தானின் முப்படை வீரர்களின் எண்ணிக்கை என்பது தொடவில்லை. இதனால் போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் நம்மை சமாளிப்பது என்பது கடினமான காரியம்.
இதனால் பாகிஸ்தான் முன்னெச்சரிக்கையாக கூடுதல் நபர்களை பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்க்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில் தான் மதரசா பள்ளியில் பயிலும் மாணவர்களை தேவைப்படும்போது 2ம் கள வீரர்களாக களமிறக்குவோம் என்று அவர் கூறினார். எல்லையில் முதற்கள வீரராக ராணுவ வீரர்கள் நிற்கும் நிலையில் அவர்களை தொடர்ந்து 2ம் கள வீரராக மதரசா மாணவர்கள் செயல்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக போர் என்றால் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகளை பாதுகாக்க வேண்டும். அவர்கள் வசிக்கும் இடங்களில் எந்த தாக்குதலையும் நடத்தக்கூடாது. ஆனால் பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் மதரசா பள்ளி மாணவர்களை போர்களத்தில் களமிறக்குவதாக கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது கருத்தை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications