சாலமன் தீவில் கடும் நிலநடுக்கம்.. ரிக்டரில் 8.0 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு
சாலமன் தீவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
அடிலெய்ட்: சாலமன் தீவுகளில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 8.0 என பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவி்ததுள்ளது. சுனாமி தாக்கும் அபாயம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
பசிபிக் பிராந்தியத்தில் உள்ள மிகச் சிறிய தீவுக்கூட்டம்தான் சாலமன் தீவு. இங்கு நேற்று இரவு இந்திய நேரப்படி 11 மணிக்கு கடலுக்கு அடியில் மிகச் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சாலமன் தீவின் கிராகிரா பகுதியில் கடலுக்கு அடியில் தென்மேற்கே 70 கி.மீ தொலைவில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதனால் சாலமன் தீவுக்கு அருகில் உள்ள பாபுவா நியூ கினியா பகுதிகளில் அடுத்த 3 மணிநேரத்தில் சுனாமி தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம், பொருட்சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
சாலமன் தீவுகளுக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். பூகம்பம் மற்றும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் அங்கு தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் பீதி நிலவுகிறது. சாலமன் தீவு, அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படும் பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கது.












Click it and Unblock the Notifications