அரவாணிகள் பெண்கள் உடையை அணியலாம்... மலேசிய கோர்ட் உத்தரவு
கோலாலம்பூர்: மலேசியாவில் 3 அரவாணிகள், பெண்களின் உடைகளை அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது மலேசிய கோர்ட். இதை அந்த 3 அரவாணிகளும் வரவேற்றுள்ளனர்.
தடையை நீக்கி அப்பீல் கோர்ட் நீதிபதி முகம்மது யூனிஸ் பிறப்பித்த உத்தரவில், இந்த தடையானது, மனிதநேயமற்றது, அவமரியாதைக்குரியது, ஒடுக்கும் நோக்கம் கொண்டது என்று கூறியுள்ளார்.
மலேசியாவில் பாலினப் பிரச்சினையும், ஓரினச்சேர்க்கையும் இன்னும் சட்டப்பூர்வமான அங்கீகாரம் பெறாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு மதத் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த தீர்ப்பு குறித்து வழக்குத் தொடர்ந்த அரவாணிகளின் வழக்கறிஞரான ஆஸ்டன் பைவா கூறுகையில், இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. முன்னுதாரணமானது என்றார்.
மலேசியாவில் இஸ்லாமியர்களுக்கென இஸ்லாமியச் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இதற்கே அனைத்து இஸ்லாமியர்களும் கட்டுப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமியச் சட்டத்தின்படி ஆண்கள், பெண்கள் போல டிரஸ் போட்டுக் கொள்வது, பெண்கள் போல நடை உடை பாவணைகளுன் வலம் வருவது சட்டப்படி குற்றமாகும். இதற்கு சிறைத் தண்டனையும் உண்டு. மேலும் சில மாகாணங்களில் பெண்கள் ஆண்கள் போல உடை அணிய தடையே உள்ளது.
இந்த வழக்கைத் தொடர்ந்து 3 பெண்களுமே ஆண்களாக பிறந்தவர்கள் ஆவர். ஆனால் தங்களுடைய பாலின மாறுபாட்டைத் தொடர்ந்து பெண்களாக உடை அணிந்து வலம் வந்தனர். இதற்காக 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் தலையிலும் ஹேர் கிளிப்புகளையும் மாட்டிக் கொண்டனர். சிறையில் இவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
கடந்த 2012ம் ஆண்டு கீழ்க் கோர்ட்டு ஒன்று பிறப்பித்த தீர்ப்பில் மூவரும் ஆண்களாக பிறந்தவர்கள் என்பதால் அவர்கள் ஆண்களின் உடையைத்தான் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து மூவரும் அப்பீல் செய்தனர். அதில்தான் இந்தத் தீர்ப்புஅளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்புக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.