கல்யாணம் டைவரஸ்.. கல்யாணம் டைவர்ஸ்.. மொத்தம் 3 வாட்டி.. வேற லெவல் "மாப்ளை"
தைவான்: தைவானில் ஒருவர் 4 முறை ஒரே பெண்ணை திருமணம் செய்து அவரை 3 முறை விவாகரத்தும் செய்துள்ளார்.
ஏன்யா இப்படி ஒரு கொலை வெறி என்று கிட்ட போய்க் கதையைக் கேட்டால் ஆச்சரியம் மட்டும் அல்ல தலையும் சுத்தி சுத்தி வரும்.
இவை அனைத்தும் 37 நாட்களுக்குள் நடந்தேறியுள்ளது தான் ஹைலைட்டான விஷயம். அவர் ஏன் அப்படி செய்தார் என்ற காரணத்தை நீங்கள் தெரிந்து கொண்டால் ஆச்சரியப்படுவீர்கள்.
3 முறை விவாகரத்து
தைபே நகரில் அமைந்திருக்கும் வங்கியில் எழுத்தராக பணிபுரிபவர்தான் அவர். 4 முறை ஒரே பெண்ணை திருமணம் செய்து 3 முறை விவாகரத்தும் செய்துள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி இவர் முதல் முறையாக திருமணம் செய்து கொள்ள அவருடைய வங்கியில் விடுப்புக்கு விண்ணப்பித்துள்ளார்.
32 நாட்கள்
வங்கியும் இவருடைய விண்ணப்பத்திற்கு 8 நாட்கள் விடுப்பு ஒப்புதல் அளித்துள்ளது. விடுப்பு நாட்கள் முடிந்ததும் பணிக்கு திரும்பாமல் அவர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். மறுநாள் அவரையே மீண்டும் திருமணம் செய்துள்ளார். இதற்காக தன்னுடைய வங்கியில் விடுப்புக்காக விண்ணப்பித்துள்ளார்.
மீண்டும் மீண்டும் திருமணம்
அவருடைய வாங்கி விதிகளின் படி இதற்கு வழி உண்டு என்ற எண்ணத்தில் மீண்டும் மீண்டும் 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்துள்ளார். இவ்வாறு செய்வதனால் அவர் தன்னுடைய நான்கு திருமணங்களுக்கும் சேர்த்து 32 நாட்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை என்ற சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணியுள்ளார்.
தொழிலாளர் பணியகத்தில்
ஆனால் இவரது டுபாக்கூர்தனத்தை அறிந்து கொண்ட வங்கி அவருக்கு கூடுதல் ஊதிய விடுப்புகளை வழங்க மறுத்து விட்டது. இதையடுத்து அவர் தன்னுடைய வங்கிக்கு எதிராக தொழிலாளர் பணியகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தொழிலாளர் விடுப்பு விதிகளின் 2வது பிரிவை பின்பற்றாமல் தனது வங்கி சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தர வேண்டும்
இந்த சட்டத்தின்படி, ஊழியர்கள் திருமணம் செய்து கொள்ளும்போது எட்டு நாட்கள் ஊதிய விடுப்புக்கு உரிமை உண்டு. எழுத்தர் நான்கு முறை திருமணம் செய்து கொண்டதால், அவருக்கு 32 நாட்கள் ஊதிய விடுப்பு கிடைத்திருக்க வேண்டும்.
அபராதம்
தைபே நகர தொழிலாளர் பணியகம் இந்த விவகாரத்தை விசாரித்து, வங்கி நிர்வாகம், தொழிலாளர் சட்டத்தை மீறுவதாக தீர்ப்பளித்தார். 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வங்கிக்கு 20,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் வங்கி மேல்முறையீடு செய்தது. அதில் திருமண விடுப்பை தீங்கிழைக்கும் முறைகேடு தொழிலாளர் விடுப்பு விதிகளின் கீழ் விடுப்புக்கான நியாயமான காரணம் அல்ல" என்று தெரிவித்துள்ளது.
சட்டப்படிதான் நடந்துள்ளாராம்
இதையடுத்து 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி அன்று, பீஷி தொழிலாளர் பணியகம் முந்தைய தீர்ப்பை உறுதிசெய்து, எழுத்தரின் நடத்தை நெறிமுறையற்றது என்றாலும், அவர் எந்த சட்டங்களையும் மீறவில்லை என்றும், தொழிலாளர் விடுப்பு விதிகளின் 2 வது பிரிவை வங்கி மீறியுள்ளதாகவும் கூறி தீர்ப்பளித்தது .
இப்ப சொல்லுங்க.. "கேடி பில்லா கில்லாடி ரங்கா"வை விட இவர் மிகப் பெரிய டுபாக்கூர்தானே!