எங்கள் திருமண நாள் மறக்க முடியாததாக இருக்க வேண்டும்.. இந்த ஜோடிகள் செய்த வேலையை பாருங்க!
இந்தோனேஷியாவில் தங்களின் திருமண நாள் மறக்க முடியாத நாளாக இருக்க வேண்டும் என 450 ஜோடிகள் புத்தாண்டின் போது திருமணம் செய்து கொண்டனர்.
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் தங்களின் திருமண நாள் மறக்க முடியாத நாளாக இருக்க வேண்டும் என 450 ஜோடிகள் புத்தாண்டின் போது திருமணம் செய்து கொண்டனர்.
உலகம் முழுவதும் 2017 ஆண்டு விடைபெற்று 2018ஆம் ஆண்டு பிறந்துவருகிறது. புத்தாண்டை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்தோனேஷியாவில் இந்திய நேரப்படி நேற்று இரவு 10 மணிக்கு புத்தாண்டு பிறந்தது. இதனை அந்நாட்டு மக்கள் கோலகலமாக கொண்டாடினர்.
புத்தாண்டில் திருமணம்
இந்நிலையில் இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் 450 ஜோடிகள் புத்தாண்டின் போது நள்ளிரவில் திருமணம் செய்து கொண்டனர்.
மறக்க முடியாத நாள்
தங்களின் திருமண நாள் எளிதில் மறக்க முடியாத நாளாக இருக்க வேண்டும் என புத்தாண்டு நாளில் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
அரசே ஏற்பாடு
ஒரே மேடையில் இந்த 450 ஜோடிகளும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு அரசே ஏற்பாடு செய்திருந்தது.
சான்றிதழ்கள் வழங்கப்பட்டன
இதில் கலந்து கொண்ட ஜோடியினருக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டு, அதற்கான சான்றிதழ்கள் அரசு அதிகாரிகளால் வழங்கப்பட்டது. இந்த திருமணம் அரசு சார்பில் இலவசமாக நடத்தி வைக்கப்பட்டது.
திருமணம், புத்தாண்டு
இந்த மெகா நிகழ்ச்சியில் திருமண ஜோடியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு அவர்கள் திருமணம் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
64 வயது ஜோடி திருமணம்
இந்தோனேஷியாவில் பெரும்பாலான திருமணங்கள் சட்டப்படி நடைபெறாது. அவ்வாறு தங்களின் திருமணத்தை பதிவு செய்யாத 64 வயது ஜோடி ஒன்றும் புத்தாண்டில் நடைபெற்ற மெகா திருமணத்தில் தங்களின் திருமணத்தை பதிவு செய்து சான்றிதழ் பெற்றுக்கொண்டது.
பேரக்குழந்தைகள் முன்னிலையில்
1968ஆம் திருமணம் செய்த முகமது நசீர், அமீனா ஜோடி தங்களின் திருமணத்தை பதிவு செய்யாமல் இருந்தது. 5 பிள்ளைகள் 9 பேரக்குழந்தைகளை கொண்ட இந்த ஜோடி புத்தாண்டின் போது சட்டப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் பங்கேற்று திருமணத்தை பதிவு செய்து கொண்டது.