ஊழியர்களே, யாரும் ஏழைகளுக்கு உணவு கொடுக்காதீங்க: அறிக்கைக்காக மன்னிப்பு கேட்ட மெக்டொனால்ட்ஸ்
பாரீஸ்: பிரான்ஸில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் ஏழை மக்களுக்கு உணவளிக்கக் கூடாது என்று உத்தரவிட்டதற்காக அந்நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
பிரான்ஸின் தென் பகுதியில் உள்ள மார்செய்ல் நகருக்கு அருகில் உள்ள ஹயரெஸில் மெக்டொனால்ட்ஸ் உணவகம் உள்ளது. அந்த உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வீடு இல்லாத ஏழைகளுக்கு உணவு வழங்கியுள்ளனர். இதையடுத்து மெக்டொனால்ட்ஸ் நிர்வாகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஜூலை 25ம் தேதி நடந்த சம்பவத்திற்கு பிறகு வீடு இல்லாத, ஏழைகளுக்கு யாரும் உணவு அளிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்படுகிறது. ஊழியர்களுக்கு அளிக்கப்படும் உணவை அவர்கள் தான் சாப்பிட வேண்டும். உலகில் பசியுடன் இருக்கும் அனைவருக்கும் உணவு வழங்கும் வியாபாரத்தை மெக்டொனால்ட்ஸ் செய்யவில்லை. இதையும் மீறி யாராவது ஏழைகளுக்கு உணவளித்தால் அவர்கள் வேலையை விட்டு நீக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில் தங்களின் செயலுக்காக மெக்டொனால்ட்ஸ் நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது.
மன்னிப்பு கேட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தகவல் பலகையில் ஒட்டப்பட்டிருந்த அந்த சுற்றறிக்கையை அகற்றியாகிவிட்டது. அந்த அறிக்கையை பார்த்து அதிர்ச்சி அடைந்த அனைவரிடமும் மெக்டொனால்ட்ஸ் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது. பாகுபாடு இன்றி அனைவருக்கும் சேவை செய்வது தான் எங்கள் நோக்கம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications