டொனால்ட் ட்ரம்ப்புக்கு இந்தியர்கள் ஆதரவை பெற்றுத்தர உழைத்தது இவர்கள்தான்!
வாஷிங்டன்: தெற்காசியாவை சேர்ந்த மக்கள் தொடர்பு நிறுவனமான அட் மார்க் கம்யூனிகேஷன், அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பின் வெற்றிக்காக உழைத்துள்ளது. அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகளை பெற்றுத்தருவதில் இந்த நிறுவனம் அதிகம் பங்கு வகித்துள்ளது.
அட் மார்க் கம்யூனிகேஷன் என்ற தெற்கு ஆசிய விளம்பர நிறுவன தலைவர் சையமால் மோடி கூறுகையில், "அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப்புக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அமெரிக்க மக்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்" என்றார்.
ஜனநாயக இந்து கூட்டமைப்புடன் இணைந்து 'சியாமல் மோடி-சலப் குமார் ஆகியோர் 'ஆப் கி பார் ட்ரம்ப் சர்க்கார்' என்ற பிரசாரத்தை நடத்தியிருந்தனர். அமெரிக்க வாழ் இந்தியர்கள் வாக்குகளை கவர இந்த பிரசாரம் நடத்தப்பட்டது. அமெரிக்க வாழ் இந்தியர்களை குறி வைத்து நடத்தப்பட்ட முதலாவது பிரசார பயணம் இதுவாகும்.
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், இதுபோன்ற பிரசாரம் நடத்தியதில் மகிழ்ச்சி என்கிறார் சையமால் மோடி.
கடந்த அக்டோபரில் இந்த கூட்டமைப்பினர் எடிசன் பகுதியில் நடத்திய நிகழ்ச்சியில் டொனால்ட் ட்ரம்ப் தலைமை விருந்தினராக பங்கேற்றார். சுமார் 10,000 பேர் இதில் பங்கேற்றனர். பிரபுதேவா, மலைகா போன்றோரின் கலை நிகழ்ச்சிகள் அதில் நடத்தப்பட்டன.
"இந்திய மக்களின் நம்பிக்கையை பெற ட்ரம்ப் நல்ல முயற்சிகளை எடுத்தார். இது இதற்கு முன்பு எந்த அதிபர் வேட்பாளரும் செய்யாதது. இந்திய-அமெரிக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலாவது அதிபர் வேட்பாளரும் அவரே. இப்படி ஒரு நிகழ்வில் அங்கம் வகித்தது மகிழ்ச்சியளிக்கிறது" என்று சையமால் மோடி மேலும் கூறினார்.
இந்தியாவின் முன்னணி ஆங்கில சேனல்களும், சில பிராந்திய சேனல்களும், அமெரிக்க சேனல்களில் சிலவும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்திருந்தன. இப்படியாக அந்த மக்கள் தொடர்பு நிறுவனம் மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்கு தற்போது கை மேல் பலன் கிடைத்துள்ளது. அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.