முறையான அனுமதி பெறாததால் சீனாவின் சிற்பி மா சேதுங்கின் 120 அடி சிலையை இடித்து தள்ளியது சீன அரசு !
பீஜிங்: முறையான அனுமதி பெறாததால் சீனாவின் சிற்பி மா சேதுங்கின் சிலையை இடித்து தள்ளியது சீன அரசு.
சீனாவின் சிற்பி என அழைக்கப்படும் மா சேதுங் 1893-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி சீனாவில் ஹுனன் மாநிலத்தில் ஒரு சிறிய குக்கிராமத்தில் பிறந்த விவசாயக் குடிமகன் ஆவார். பள்ளிப்படிப்பை முடித்து பீகிங் பல்கலைக் கழகத்தில், நூலக உதவியாளராக பணியில் சேர்ந்தார்.
அப்போது மன்னராட்சிக்கு எதிராக சன்யாட் சென் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. மேலும், கம்யூனிஸக் கொள்கைகளும் வேகமாகப் பரவின. அதன்பால் ஈர்க்கப்பட்ட மா சேதுங் பல்வேறு போராட்டங்களிலும் பங்கெடுத்தார். 1935-ம் ஆண்டுக்குப் பிறகு, பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றார் மா சேதுங்.
பல நூற்றாண்டு கால அன்னிய ஆக்கிரமிப்புக்கு பின்னர் 20-ம் நூற்றாண்டில் சீனாவில் கம்யூனிச புரட்சியையும், உள்நாட்டு போரையும் முன்னின்று நடத்தியவர் இவர்.
பின்னர் சீனாவை ஏறத்தாழ 30 ஆண்டு காலம் வல்லமையுடன் ஆட்சி செய்தவர். அதனால்தான் அவர் சீனாவின் சிற்பி என்று இன்றும் போற்றப்படுகிறார். சீனாவில் பல துறைகளிலும் நவீனமயத்தை ஏற்படுத்திய மா சேதுங், 1976-ம் ஆண்டு செப்டம்பர் 9ல் மறைந்தார்.
இந்த நிலையில் அவரை போற்றும் விதமாக ஹெனான் மாகாணத்தில் உள்ள கைபெங் நகரின் அருகே 36 மீட்டர் (118 அடி, 11 அங்குலம்) உயரத்தில் 30 லட்சம் யுவான்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் மூன்று கோடி ரூபாய்) செலவில் பிரமாண்டமான தங்கச்சிலையை உருவாக்கும் பணிகள் நடபெற்று வந்தது.
உள்ளூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட நிதியின் மூலம் இந்த சிலையை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. சிலையை அமைக்கும் பணிகள் ஏறக்குறைய முடியும் தருவாயில் இருந்தன.
இந்நிலையில் இந்த பிரமாண்ட சிலையை அமைக்க அரசிடம் முறையான அனுமதி பெறவில்லை என்று கூறி ஒரே நாளில் சிலையை இடித்து தள்ளியது சீன அரசு. இடித்து தள்ளப்பட்ட மாசேதுங் சிலை காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.