ஏ பாப்பா.. அம்மா பாவம்லயா.. சீக்கிரம் வெளியே வா.. சிசுவுக்கு "நோட்டீஸ்" விட்ட ஜட்ஜ்!
அமெரிக்காவில் பிரசவத்துக்காக காத்திருந்து காத்திருந்து சோர்வடைந்த ஒரு பெண் வயிற்றில் உள்ள குழந்தைக்கு விரைவில் வெளியேற நோட்டீஸ் அளித்துள்ளார்.
வாஷிங்டன்: அமெரிக்காவில் பிரசவ வலி ஏற்பட்டு நின்றுவிட்டதால் பொறுமையை இழந்த பெண் ஒருவர் தன் வயிற்றிலிருந்து உடனே வெளியேறுமாறு சட்டப்பூர்வ நோட்டீஸை வழங்கியது வினோதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணுக்கு பிரசவம் என்பது மறு பிறவி போன்றது. இந்த தாள முடியாத வலியின் போது பெண்கள் செய்யும் சேட்டைகள் ரசிக்கும்படியாகவும், பரிதாபத்துக்குரியதாகவும் இருக்கும்.
சில பெண்கள் வலி தாளமுடியாமல் மருத்துவரை சிசேரியன் செய்ய கோரி மிரட்டுவர். இன்னும் சிலரோ கரெண்டில் கை வைத்து விடுவேன் என்று சுவிட்ச் பாக்ஸில் கை வைக்க செல்வர்.
தாயுடன் சண்டை
குழந்தை பிறப்பின்போது வலி ஏற்படும் என்பது உனக்கு தெரிந்திருந்தும் எனக்கு ஏன் திருமணம் செய்துவைத்தாய் என்று உடன் இருக்கும் தாயிடம் சண்டையிடுவர். மேலும் அருகில் கணவர் இருந்தால் போச்சு, உன்னால் தானே என்று அவரை வறுத்தெடுப்பர்.
வித்தியாசமான முறை
இதுபோல் பிரசவத்தின் போது ஏராளமான வித்தியாசமான அனுபவங்கள் ஏற்படும். எனினும் இதை மறந்துவிட்டு இரண்டு, மூன்று என குழந்தை பெற்றுக் கொள்ளும் தாய்மார்களும் உண்டு. இந்நிலையில் அமெரிக்காவில் ஒரு பெண் வித்தியாசமான முறையில் குழந்தை பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் அனுமதி
அமெரிக்காவின் உதாவில் உள்ள கெயில் பே. இவர் அங்குள்ள நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கெனவே இரு குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் மூன்றாவதாக கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியான இவர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் கடந்த 16-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
காத்திருந்து ...காத்திருந்து
அப்போது பிரசவ வலி ஏற்பட்டது. இதை எதிர்கொண்ட கெயில், இன்னும் சிறிது நேரத்தில் குழந்தை பிறந்துவிடும் என்றிருந்தார். ஆனால் அதற்கு பிரசவ வலி முற்றிலும் நின்றுவிட்டது. இதனால் வலி வரும் என காத்திருந்து காத்திருந்து சோர்வடைந்தார்.
கையெழுத்திட்ட நோட்டீஸ்
உடனே தன்னுடன் பணியாற்றும் நீதிபதியை அணுகி குழந்தை தன் வயிற்றில் இருந்து உடனடியாக வெளியேற சட்டப்பூர்வமான நோட்டீஸ் வழங்க கோரினார். அந்த நீதிபதி லின் டேவிஸ் கெயில் பே, உதா, கருவறையில் இருப்பவர் என்ற முகவரியிட்டு கையெழுத்திட்ட வெளியேற்ற நோட்டீஸை அனுப்பினார்.
நோட்டீஸை மதித்த குழந்தை
இதை அந்த தாய் தனது குழந்தையிடம் படித்துக் காண்பித்தார். இந்த நீதிமன்றத்தின் நோட்டீஸுக்கு மதிப்பளித்த அந்த சிசு 12 மணிநேரம் கழித்து வெளியே வந்தது. தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.