15 கி.மீ. சுற்றளவில் சிதறி விழுந்த மலேசிய விமானம்... 181 பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு
கீவ்: சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் சேத பகுதிகள் சுமார் 15 கிமீ தூரத்திற்கு சிதறிக் கிடப்பதாகவும், பயணம் செய்த 181 பேரின் உடல்கள் கருகிய நிலையில் தற்போது கண்டெடுக்கப் பட்டுள்ளதாக உக்ரைன் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று மதியம் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17, உக்ரைனில் ரஷ்ய எல்லைக்கு அருகே செல்கையில் ரஷ்ய ராணுவத்தின் ஆதரவுப் படை தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம், கிரபோவோ என்ற கிராமம் அருகே விழுந்தது. இதில், விமானத்தில் பயணம் செய்த 280 பயணிகள் மற்றும் 15 சிப்பந்திகள் என 295 பேரும் உடல் கருகி பரிதாபமாகப் பலியானார்கள். இத்தகவலை உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உக்ரைன் மீட்புப் படையினர், இதுவரை 181 பேரின் உடல்களை மீட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், விமானத்தின் சேத பகுதிகள், 15 கி.மீ. சுற்றளவுவரை சிதறி கிடப்பதாகவும் சம்பவ இடத்தில் உள்ள உக்ரைன் மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications